அரசியல் மாற்றத்தை கொடுக்குமா மம்தா பானர்ஜி மாநாடு


அரசியல் மாற்றத்தை கொடுக்குமா மம்தா பானர்ஜி மாநாடு
x
தினத்தந்தி 19 Jan 2019 5:49 AM GMT (Updated: 19 Jan 2019 7:07 AM GMT)

25 தேசிய தலைவர்கள் கலந்து கொள்ளும் அரசியல் மாநாட்டை நடத்துகிறார் மம்தா பானர்ஜி. இது அரசியல் மாற்றத்தை கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

கொல்கத்தா,

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அந்த மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில், எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட மாநாடு இன்று நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் தேதி மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு, தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு முயற்சியாக மேற்கு வங்க முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று பிரம்மாண்ட மாநாடு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு மம்தா அழைப்பு அனுப்பியுள்ளார். 

இந்த பொதுக்கூட்டத்தில் உ.பி.யின் ராஷ்டீரிய லோக் தளம் சார்பில் அஜித் சிங்,  ஜெயந்த் சவுத்ரி, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பருக் அப்துல்லா, உமர் அப்துல்லா, ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், பாஜக அதிருப்தி எம்.பி சத்ருகன் சின்கா, தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின்  உள்பட முக்கிய தலைவர்கள் இந்த மெகா பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. முன்னதாக, இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த கட்சித்தலைவர்களை மம்தா பானர்ஜி நேற்று சந்தித்து பேசினார். 



காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. எனினும், இந்த மாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்து மம்தா பானர்ஜிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியிருந்தார். இந்த மாநாட்டில் காங்கிரஸ் சார்பாக மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோர் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 

கொல்கத்தா பேரணியில் கலந்து கொள்ள அகிலேஷ் யாதவ் கொல்கத்தா சென்றார். அவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், இந்த நாடு புதிய பிரதமரை விரும்புகிறது. இந்த நாடு புதிய பிரதமருக்காக காத்திருக்கிறது என கூறினார்.

பிரம்மாண்ட பொதுக்கூட்ட மாநாடு நடைபெறும் பிரிகேட் பரேட் மைதானத்தில் 5 மேடைகள் அமைக்கபட்டு  உள்ளது. 7 லட்சம் பேர் கூடலாம் என போலீசார்  தெரிவித்துள்ளனர். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தக் கூட்டத்திற்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடுவார்கள் என்று தெரிவித்துள்ளது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அரசியல் மாநாடாக இந்த கூட்டம் அமையும் எனவும் அக்கட்சியினர் கூறியுள்ளனர். ”ஒற்றுமை இந்தியா மாநாடு” என்ற பெயரில் நடைபெறும் இந்த கூட்டம் பாஜகவுக்கு எதிராக அனைத்துக்கட்சிகளையும் ஒரணியில் திரளவைக்கும் முயற்சியாக நடத்தப்படுகிறது. 

பிரமாண்ட மாநாட்டுக்காக, ஏராளமானோர் இன்று காலையிலேயே பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் கூட தொடங்கி உள்ளனர். கடும் பனியையும் பொருட்படுத்தாமல் அவர்கள் குவிந்து வருகின்றனர்.



பேரணியில் கலந்து கொள்வதற்காக மம்தா பானர்ஜி மைதானத்திற்கு வருகை தந்துள்ளார்.

Next Story