மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்.எல்.ஏ


மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்.எல்.ஏ
x
தினத்தந்தி 20 Jan 2019 5:38 AM GMT (Updated: 20 Jan 2019 5:38 AM GMT)

உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ சாதனா சிங், மாயாவதி குறித்து மிகவும் தரம் தாழ்ந்த வகையில் கருத்துக்களை தெரிவித்து இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜகவைச்சேர்ந்த பெண் எம்.எல்.ஏ சாதனா சிங், மாயாவதி குறித்து மிகவும் தரம் தாழ்ந்த வகையில் கருத்துக்களை தெரிவித்து இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக எம்.எல்.ஏ மாயாவதி குறித்து பின்வருமாறு கூறினார். ” சுயமரியாதை பற்றி மாயாவதிக்கு ஒன்றும் தெரியாது.

மகாபாரதத்தில் திரவுபதி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டபின், அவர் பழிவாங்கும் எண்ணத்துக்குத் திரும்பினார். ஆனால், மாயாவதி, அனைத்தையும் இழந்துவிட்டார், இப்போது தனது சுயமரியாதையையும் அதிகாரத்துக்காக விற்கத் துணிந்துவிட்டார். மாயாவதியின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெண் சமூகத்துக்கே மாயாவதி ஒரு கறை. இவ்வாறு சாதானா சிங் பேசினார்.

பாஜக எம்.எல்.ஏவின் கருத்து  கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  பகுஜன் சமாஜ் கட்சியின் சதீஸ் சந்திர மிஸ்ரா பாஜக எம்.எல்.ஏ கருத்து பற்றி கூறும் போது, “ சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்துள்ளதைப் பொறுக்க முடியாமல் பாஜகவினர் பேசுகிறார்கள். வரும் மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் நிலைகுலைந்து பேசுகிறார்கள்” என்றார்.

கடந்த 1995-ம் ஆண்டு லக்னோவில் உள்ள விருந்தினர் மாளிகையில், சமாஜ்வாதிக் கட்சியினர் மாயாவதியை தாக்கி அவமரியாதை செய்தனர். ஆனால், இரு கட்சிகளும் தங்களின் முந்தைய பகையை மறந்து, வரும் மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளனர். 


Next Story