மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்


மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்
x
தினத்தந்தி 20 Jan 2019 10:20 AM GMT (Updated: 2019-01-20T15:50:53+05:30)

மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் விடுக்க உள்ளது.

உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ சாதனா சிங், மாயாவதி குறித்து மிகவும் தரம் தாழ்ந்த வகையில் கருத்துக்களை தெரிவித்து இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுயமரியாதை பற்றி மாயாவதிக்கு ஒன்றும் தெரியாது. மகாபாரதத்தில் திரவுபதி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டபின், அவர் பழிவாங்கும் எண்ணத்துக்குத் திரும்பினார். ஆனால், மாயாவதி, அனைத்தையும் இழந்துவிட்டார், இப்போது தனது சுயமரியாதையையும் அதிகாரத்துக்காக விற்கத் துணிந்துவிட்டார். மாயாவதியின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெண் சமூகத்துக்கே மாயாவதி ஒரு கறை என்று விமர்சனம் செய்திருந்தார் சாதனா சிங். அவருடைய இப்பேச்சுக்கு பல்வேறு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1995-ம் ஆண்டு லக்னோவில் உள்ள விருந்தினர் மாளிகையில், சமாஜ்வாதிக் கட்சியினர் மாயாவதியை தாக்கி அவமரியாதை செய்தனர். ஆனால், இரு கட்சிகளும் தங்களின் முந்தைய பகையை மறந்து, வரும் மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளனர். 

இதற்கிடையே  பகுஜன் சமாஜ் கட்சியின் சதீஸ் சந்திர மிஸ்ரா பேசுகையில், “ சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்துள்ளதைப் பொறுக்க முடியாமல் பாஜகவினர் பேசுகிறார்கள். வரும் மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் நிலைகுலைந்து பேசுகிறார்கள்” என்றார். இப்போது, மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.

“ஒரு கட்சியின் தலைவரை ஒரு பெண்ணை பற்றி மற்றொரு பெண் இவ்வாறு தரக்குறைவாக விமர்சிப்பது ஏற்க முடியாது, கண்டிக்கத்தக்கது. இதைதேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து எடுத்துக்கொண்டுள்ளது. சாதனா சிங்குக்கு நாளை அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும்? என தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறியுள்ளார்.

Next Story