பீகாரில் பயங்கர விபத்து: ரெயில் கவிழ்ந்து 6 பயணிகள் பலி


பீகாரில் பயங்கர விபத்து: ரெயில் கவிழ்ந்து 6 பயணிகள் பலி
x
தினத்தந்தி 3 Feb 2019 10:45 PM GMT (Updated: 3 Feb 2019 9:43 PM GMT)

பீகாரில் ரெயில் கவிழ்ந்து 6 பயணிகள் பலியாகினர்.

சோன்பூர்,

பீகார் மாநிலம், கிருஷ்ணகஞ்ச் மாவட்டம், ஜோக்பாணி நகரில் இருந்து டெல்லிக்கு சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயில் நேற்றுமுன்தினம் இரவு 8.10 மணிக்கு வழக்கம் போல ஜோக்பாணி நகரில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

நேற்று அதிகாலை சுமார் 4 மணிக்கு, பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள வைசாலி மாவட்டத்தின் சஹாடாய் பஜர்க் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக, அந்த ரெயில் பயங்கர சத்தத்துடன் தடம் புரண்டு கவிழ்ந்தது.

அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் என்னவோ ஏதோ என பதறியடித்துக் கொண்டு எழுந்தனர். விபத்து நடந்திருப்பதை உணர்ந்து அலறினர்; தவித்தனர்.

இந்த விபத்தில், முன்பதிவு இல்லாத ஒரு சாதாரண பெட்டியும், ஒரு ஏ.சி. பெட்டியும், தூங்கும் வசதி கொண்ட 3 பெட்டிகளும், மேலும் 6 பெட்டிகளும் என மொத்தம் 11 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினரும், ரெயில்வே உயர் அதிகாரிகளும் விரைந்தனர். ஆம்புலன்சுகளும் விரைந்தன. சோன்பூர், பராயுனி நகரங்களில் இருந்து டாக்டர் குழுவினரும் உடனடியாக அங்கு சென்றனர்.

உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்தது.

இந்த விபத்தில் 7 பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறின. ஆனால் பின்னர் 6 பேர் மட்டுமே பலியானதாக உறுதி செய்யப்பட்டது.

தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலே, இந்த ரெயில் விபத்துக்கு காரணம் என முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

எனினும், இந்த விபத்து குறித்து ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் (கிழக்கு மண்டலம்) லத்தீப் கான் விசாரணை நடத்துவார் என ரெயில்வே அறிவித்துள்ளது.

விபத்தில் காயம் அடைந்த 37 பேர் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 8 பேர் லேசான காயங்களுக்கு உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். எஞ்சியவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களில் 7 பேர் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களது குடும்பத்தினருக்கு அனுதாபமும் தெரிவித்துள்ளார்.

இதே போன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

இந்த விபத்தில் உயிரிழந்த 6 பயணிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் அலுவலகம் அறிவித்தது.

இதே போன்று பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமாரும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தார்.

விபத்துக்குள்ளான ரெயிலில், பாதிப்புக்கு உள்ளாகாத 12 பெட்டிகள், 1,500 பயணிகளுடன் காலை 9.52 மணிக்கு தனப்பூர் புறப்பட்டு சென்றது. அங்கிருந்து 11 பெட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டு டெல்லிக்கு அந்த ரெயில் தனது பயணத்தை தொடர்ந்தது.


Next Story