பொக்ரானில் இரவும் பகலும் பாராமல் மிகப்பெரிய ஒத்திகையில் ஈடுபட்ட இந்திய விமானப்படை!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் இரவும் பகலும் பாராமல் இந்திய விமானப்படை மிகப்பெரிய ஒத்திகையில் ஈடுபட்டது.
ஜெய்ப்பூர்,
காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை தண்டிப்பதற்கு பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகள் ஓடி ஒளிந்து கொண்டாலும் கூட அவர்கள் வெளியே இழுத்து வரப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தநிலையில், பாகிஸ்தானின் எல்லைப் பகுதிக்கு அருகே அமைந்துள்ள பொக்ரான் பகுதியில் "வாயு சக்தி' என்ற பெயரில் இந்திய விமானப்படை நேற்று மிகப் பெரிய ஒத்திகையை நடத்தி காட்டியது. இந்த ஒத்திகைக்கு தரைப்படைத் தளபதி பிபின் ராவத், விமானப்படைத் தளபதி பி.எஸ். தனோவா, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இரவு பகலாக நடத்தப்பட்ட ஒத்திகை குறித்து விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா கூறுகையில்,
”நம்முடைய அரசு உறுதியளித்துள்ளபடி, புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம். எந்தநேரத்திலும் தகுந்த பதிலடி கொடுப்பதற்காக இந்திய விமானப்படை தயாராகி வருகிறது. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்திலும், இறையாண்மையை காப்பதிலும் இந்திய விமானப்படை தகுதியுடன் இருக்கிறது என்பதற்கு உறுதியளிக்கிறேன்.
ஏறக்குறைய 140 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ஏவுகணைகள், நீண்டதொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகள் ஆகியவற்றை வீசியும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம் " எனத் தெரிவித்தார்.
Related Tags :
Next Story