இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது - ராகுல்காந்தி


இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது - ராகுல்காந்தி
x
தினத்தந்தி 23 Feb 2019 1:36 PM GMT (Updated: 23 Feb 2019 1:36 PM GMT)

பாஜக ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற மாணவர்களுடனான சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,

ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதற்கு தீர்வு காணப்படாததால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு பெருமளவு குறைந்து விட்டது.

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 450 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்படுகிறது. ஆனால், சீனாவில், அதே 24 மணி நேரத்தில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. இது எனது கணக்கு கிடையாது. லோக்சபாவில் நிதி அமைச்சகம் தாக்கல் செய்த கணக்கு. 

மாணவர்களின் கல்விக்கடனை ஏன் ரத்து செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பட்ஜெட்டில் கல்விக்கான நிதியை அதிகரிப்போம். வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து கிடைக்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இதனை செய்வோம். 

நாட்டின் வளம் அனைத்தும் சில தனி நபர்களின் கைகளில் உள்ளது. மாநில அரசுகள் கல்விக்காக அதிகம் செலவு செய்ய வேண்டும். தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. தொழிலதிபர்களுக்கு மட்டுமே பாஜக உதவுகிறது. 

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story