காஷ்மீரில் வீட்டில் பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


காஷ்மீரில் வீட்டில் பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 3 March 2019 2:47 PM GMT (Updated: 3 March 2019 7:49 PM GMT)

காஷ்மீரில், வீட்டில் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தில் புலவாமாவில் நடந்த தாக்குதலுக்கு இந்திய விமானப்படை தக்க பதிலடி கொடுத்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. பயங்கரவாதிகளும் தாக்குதல் நடத்துகிறார்கள்.

குப்வாரா மாவட்டம் கரல்குண்ட் கண்ட்வாரா என்ற இடத்தில் உள்ள பாபாகுண்ட் பகுதியில் 3 வீடுகளில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக கடந்த வியாழக்கிழமை பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும், மாநில போலீசாரும் அங்கு விரைந்து சென்று அந்த வீடுகளை சுற்றி வளைத்தனர்.

அப்போது ஒரு வீட்டுக்குள் பதுங்கி இருந்து பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர்.

பின்னர் வீட்டுக்குள் இருந்து துப்பாக்கியால் சுடுவது திடீரென்று நின்றுபோனதால், பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதி அவர்களுடைய உடல்களை மீட்பதற்காக பாதுகாப்பு படையினர் வெள்ளிக்கிழமை அதிகாலை அந்த வீட்டுக்குள் சென்றனர். அப்போது வீட்டுக்குள் இருந்த 2 பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி திடீரென்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் மத்திய ரிசர்வ் படை போலீசார் இருவரும், மாநில போலீசார் இருவரும் பலி ஆனார்கள்.

மேலும் குண்டு காயம் அடைந்த 9 வீரர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் மத்திய ரிசர்வ் போலீஸ்படை வீரர் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று மரணம் அடைந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

துப்பாக்கி சண்டையின் போது பொதுமக்கள் தரப்பிலும் ஒருவர் உயிர் இழந்தார்.

இதற்கிடையே, தொடர்ந்து நடந்த துப்பாக்கி சண்டை நேற்று முடிவுக்கு வந்தது. 2 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்கள் பதுங்கி இருந்த வீட்டில் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த துப்பாக்கி சண்டையில் பலியான மத்திய ரிசர்வ் படை வீரர்களில் வினோத்குமார் என்பவர் உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தையும், ஷியாம் நாராயண் யாதவ் என்பவர் அதே மாநிலத்தில் உள்ள காஜிபூரையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

அவர்களுடைய குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளார்.

இதற்கிடையே பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவின் காரணமாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அந்த பாதையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

நிலைமை ஓரளவு சீரடைந்ததை தொடர்ந்து, ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் மட்டும் தொடர்ந்து செல்ல நேற்று அனுமதிக்கப்பட்டன.



Next Story