நேரம் முடிந்துவிட்டது... காங்கிரசுக்கு கைவிரித்த ஆம் ஆத்மி


நேரம் முடிந்துவிட்டது... காங்கிரசுக்கு கைவிரித்த ஆம் ஆத்மி
x
தினத்தந்தி 19 March 2019 12:55 PM GMT (Updated: 20 March 2019 10:04 AM GMT)

டெல்லியில் காங்கிரசுடன் கூட்டணியில்லை என ஆம் ஆத்மி கூறிவிட்டது.

புதுடெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளது.  பா.ஜனதாவிற்கு எதிரான கொள்கையில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் ஒரு வரிசையில் வருகிறது. எனவே, இரு கட்சிகளும் டெல்லியில் கூட்டணி வைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால் கெஜ்ரிவாலால் ஆட்சியைவிட்டு அகற்றப்பட்ட ஷீலா தீட்சித்திற்கு கூட்டணியில் நாட்டம் இல்லை. 

காங்கிரசுடன் கூட்டணிக்கு பல்வேறு யோசனைகளுடன் ஆம் ஆத்மி பேச்சுவார்த்தையை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியது. 6 தொகுதிகளுக்கு ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்தது. ஒரு தொகுதியை வைத்திருந்தது. காங்கிரசுக்கு இரண்டு தொகுதி வரையில் தரவும், பஞ்சாப்பில் கூட்டணி வைக்கவும் ஆம் ஆத்மி முன்வந்தது.  டெல்லி காங்கிரஸ் தலைமையில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க இருவேறு கருத்துக்கள் நிலவியது. ராகுல் காந்திடம் பேசிய ஷீலா திட்சீத் “ஆம் ஆத்மியுடன் கூட்டணியில்லை, இது இறுதியானது. இந்த முடிவை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார். காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும்,” என்றார். 

இதனையடுத்து  கெஜ்ரிவால், காங்கிரஸ் அகங்காரம் பிடித்தது, டெபாசிட் கூட பெறாது என விமர்சனம் செய்தார். 

பின்னர் டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது என தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொண்டர்கள் 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிப்பெற பணியாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் வாக்குகள் சிதறும் என கூறப்பட்டது. இதுவரையில் வெளியான கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மிக்கு சாதமான நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஆம் ஆத்மியுடன் கூட்டணி என்ற நோக்கில் காங்கிரஸ் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியது.

இந்நிலையில் காங்கிரசுடன் டெல்லியில் கூட்டணி கிடையாது என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கோபால் ராய் கூறியுள்ளார். 

“காங்கிரசுக்காக நாங்கள் நீண்ட நாள் காத்திருந்தோம்.. ஆனால் காங்கிரஸ் அகங்காரத்துடன் நடந்து கொண்டது. ஆம் ஆத்மி காத்திருந்தால் பா.ஜனதாவிற்கு எதிரான பிரசாரத்திற்கு பெரும் பின்னடைவாக அமையும்,” என கூறிவிட்டார். மார்ச் 23-ம் தேதி ஆம் ஆத்மி பிரசாரத்தை தீவிரப்படுத்துகிறது.

Next Story