டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மதஉணர்வுகளை புண்படுத்தியுள்ளார் என போலீசில் புகார்


டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மதஉணர்வுகளை புண்படுத்தியுள்ளார் என போலீசில் புகார்
x
தினத்தந்தி 23 March 2019 3:05 PM GMT (Updated: 23 March 2019 3:05 PM GMT)

டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மதஉணர்வுகளை புண்படுத்தியுள்ளார் என போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.  இவரது கட்சியின் சின்னம் துடைப்பம்.  டுவிட்டரில் செய்திகளை வெளியிட்டு வரும் அவர் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவொன்று மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  அதில், மத சின்னத்தினை நபரொருவர் துடைப்பம் கொண்டு துரத்துவது போன்று ஓவியம் இடம்பெற்று இருந்தது.

இதனால் கெஜ்ரிவாலுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன், ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை வேட்பாளர் ராகவ் சத்தா டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், வீடு வீடாக சென்று பா.ஜ.க. பிரசாரம் செய்கிறது என பதிவிட்டு, வீடு ஒன்றின் வாசலில் பசு மற்றும் கன்று நிற்பது போன்ற புகைப்படத்தினையும் இணைத்து பதிவிட்டார்.  இதனை முதல் மந்திரி கெஜ்ரிவால் லைக் செய்துள்ளார்.

இதுபற்றி டெல்லி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான பா.ஜ.க.வை சேர்ந்த விஜேந்தர் குப்தா கூறும்பொழுது, இந்திய தேர்தல் ஆணையத்திடம் சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளோம்.  பசு நல்லிணக்கத்தின் அடையாளம்.  இதனை ஆம் ஆத்மி அரசியலாக்குகின்றது.  சமூகத்தில் பதற்றத்தினை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.  இதுபற்றி ஆணையத்திடம் எடுத்து கூறுவோம் என கூறினார்.

இந்த டுவிட்டர் பதிவு தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவது ஆகும்.  இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் டெல்லி பா.ஜ.க. புகார் அளிக்கும் என்றும் கூறினார்.

இந்த நிலையில், மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையில் கெஜ்ரிவால் டுவிட்டர் பதிவினை வெளியிட்டு சர்ச்சை கிளப்பி உள்ளார்.

Next Story