போலீஸ் அதிகாரி பற்றி பா.ஜனதா பெண் வேட்பாளர் சர்ச்சை கருத்து - எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டார்


போலீஸ் அதிகாரி பற்றி பா.ஜனதா பெண் வேட்பாளர் சர்ச்சை கருத்து - எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டார்
x
தினத்தந்தி 19 April 2019 10:30 PM GMT (Updated: 19 April 2019 9:48 PM GMT)

மும்பை தாக்குதலில் இறந்த போலீஸ் அதிகாரி பற்றி பா.ஜனதா பெண் வேட்பாளர் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டார்.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பா.ஜனதா பெண் வேட்பாளராக மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளியான சாத்வி பிரக்யா சிங் தாகூர் அறிவிக்கப்பட்டார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் முதல்-மந்திரி திக்விஜய்சிங்கை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இந்நிலையில் சாத்வி தொண்டர்கள் மத்தியில் பேசும்போது, “நான் மும்பை சிறையில் இருந்தபோது போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்கரே தவறாக என்னை வழக்கில் சிக்க வைத்தார். அவர் என்னை மிகவும் மோசமாக நடத்தினார். சகிக்க முடியாத கடுமையான வார்த்தைகளால் திட்டுவது போன்ற சித்ரவதைகளை செய்தார். இதனால் நான் அவரிடம் நீங்களும், உங்கள் வம்சமும் அழிந்துபோகும் என்றேன். ஒரு மாதத்திற்கு பின்னர் அவர் (மும்பை தாக்குதலில்) பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்” என்றார்.

அவரது இந்த கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இதனை கண்டித்தார். பா.ஜனதா, இது அவரது சொந்த கருத்து, ஹேமந்த் கார்கரே உயிர்நீத்த தியாகி என தெரிவித்தது. இதனால் சாத்வி தனது கருத்தை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும், இதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.


Next Story