சபாநாயகர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கோரி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு: இன்று விசாரணை


சபாநாயகர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கோரி  எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு: இன்று விசாரணை
x
தினத்தந்தி 6 May 2019 3:00 AM GMT (Updated: 6 May 2019 6:27 AM GMT)

சபாநாயகர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

புதுடெல்லி, 

அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி, விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆகிய மூவரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி, அவர்கள் 3 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் தனபாலிடம் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார்.

அதைத்தொடர்ந்து இந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் தனபால் கடந்த செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பினார். ஒரு வாரத்துக்குள் மூன்று எம்.எல்.ஏ.க்களும் தங்களது நிலை பற்றி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது. அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்ட சில மணி நேரத்தில் சட்டசபை செயலாளரிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், “சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாகவும் உடனே அதை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் கூறப்பட்டு இருந்தது.


இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

செவ்வாய்க்கிழமையன்று தமிழக சட்டசபை சபாநாயகர் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீசில் 7 நாட்களுக்குள் விளக்கம் கோரி உள்ளார். இந்த நிலையில் எங்கள் பதிலுக்குக்கூட காத்து இருக்காமல் அவர் எங்களை தகுதி நீக்கம் செய்யும் வாய்ப்பு உள்ளது. கடந்த 30-ந் தேதியன்று எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. எங்களுக்கு இப்படி நோட்டீஸ் அனுப்ப சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாது. அவர் பாரபட்சமாக செயல்படுகிறார்.

ஏற்கனவே துணை முதல்-அமைச்சர் மற்றும் அவருடைய ஆதரவாளர்களான 10 எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு எதிராக வாக்களித்தும் அவர்களை இதுவரை தகுதிநீக்கம் செய்யவில்லை. தன்னுடைய பாரபட்சமான நோக்கினால் எங்கள் மீது இதுபோன்ற நடவடிக்கையை அவசரமாக எடுக்கிறார்.


சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருக்கும் போது இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க அவருக்கு அதிகாரம் கிடையாது. இது தொடர்பாக முன்பு ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு கூற உள்ளது. பெருவாரியான உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்த சபாநாயகர் இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க முடியாது. எனவே சபாநாயகர் எங்களுக்கு அனுப்பி உள்ள நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல்  ஆஜராகி, “சபாநாயகர் 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பி உள்ள நோட்டீசுக்கு திங்கட்கிழமைக்குள் விளக்கம் கோரி இருக்கிறார். அவர்களுடைய விளக்கத்தை கேட்காமலே 3 பேரையும் அன்று தகுதி நீக்கம் செய்யும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வருகிற  6-ந் தேதி (இன்று) இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.


Next Story