50 % ஒப்புகைச்சீட்டை எண்ணக்கோரும் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்


50 % ஒப்புகைச்சீட்டை எண்ணக்கோரும் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
x
தினத்தந்தி 7 May 2019 5:40 AM GMT (Updated: 7 May 2019 5:40 AM GMT)

50 % ஒப்புகைச்சீட்டை எண்ணக்கோரி 21 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

ஒரு மக்களவைத் தொகுதிக்குள் அடங்கும் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஒரு வாக்குச் சாவடியில் இவிஎம் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை, விவிபாட் இயந்திரங்கள் வழங்கும் ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்த்து வாக்கு எண்ணிக்கையைச் சரி பார்க்க தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

ஆனால், ‘‘அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் 50 சதவீத வாக்குகளை இரண்டு இயந்திரங்களிலும் ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும்’’ என்று தெலுங்கு தேசம், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உட்பட 21 எதிர்க்கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். 

வழக்கு விசாரணையின்போது, ‘‘இவிஎம் இயந்திரங்களுடன் 50 சதவீத விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளை ஒப்பிட்டு சரி பார்த்தால், தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும். அத்துடன் தற்போது தேர்தல் நெருங்கி விட்டது’’ என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் உள்ள 5 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை, விவிபாட் இயந்திரங்களில் பதிவான ஒப்புகைச்சீட்டுடன் சரிபார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து 21 கட்சிகள் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை  உச்சநீதிமன்றம்,  தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Next Story