16வது மக்களவை தேர்தல்; பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றி


16வது மக்களவை தேர்தல்; பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றி
x
தினத்தந்தி 16 May 2019 8:54 AM GMT (Updated: 16 May 2019 8:54 AM GMT)

இந்தியாவில் நடந்த 16வது மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.

நாட்டில் 16வது மக்களவை தேர்தல் கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் 7ந்தேதியில் இருந்து மே 12ந்தேதி வரை 9 கட்டங்களாக நடந்தது.  81.45 கோடி பேர் வாக்களிக்க தகுதியுடையவர்களாக இருந்தனர்.  இது கடந்த 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை விட 10 கோடி அதிகம் ஆகும்.

இந்த தேர்தலில் 8,251 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  சராசரியாக 66.40 சதவீத வாக்குகள் பதிவாகின.  இந்திய வரலாற்றிலேயே இது மிக அதிக அளவு ஆகும்.  தேர்தல் முடிவுகள் மே 16ந்தேதி வெளிவந்தன.  இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 336 தொகுதிகளை கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது.  பா.ஜ.க., பிற கட்சிகளின் ஆதரவு தேவையின்றி ஆட்சி அமைக்கும் அளவுக்கு 282 தொகுதிகளை கைப்பற்றியது.  அக்கட்சி 31 சதவீத வாக்குகளும், கூட்டணி 38.5 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தன.

காங்கிரஸ் கட்சியானது 44 தொகுதிகளுடன் 8.1 சதவீத வாக்குகளும், அதன் தலைமையிலான கூட்டணி 59 தொகுதிகளுடன் 19.3 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தன.  இதனால் படுமோசம் நிறைந்த தோல்வியை அக்கட்சி தழுவியது.  மக்களவையில் எதிர்க்கட்சியாக இருக்க தேவையான 10 சதவீத உறுப்பினர்கள் எண்ணிக்கையை அக்கட்சி பெறவில்லை.  இதனால் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி இல்லாத நிலை ஏற்பட்டது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் கடந்த 2014ம் ஆண்டு மே 17ந்தேதி மன்மோகன் சிங் தனது பதவி விலகல் கடிதத்தினை கொடுத்து விட்டார்.  ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்று கொண்டு அடுத்த பிரதமர் பதவியேற்கும் வரை சிங் பிரதமராக இருந்து வந்துள்ளார்.  இதன்பின் மே 26ந்தேதி பிரதமராக மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் பதவியேற்று கொண்டனர்.

Next Story