காங்கிரசுடன் கூட்டணி நிலைப்பாட்டை மாற்றும் மம்தா பானர்ஜி


காங்கிரசுடன் கூட்டணி நிலைப்பாட்டை மாற்றும் மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 16 May 2019 12:11 PM GMT (Updated: 16 May 2019 12:11 PM GMT)

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்பதில் மம்தா பானர்ஜி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றியுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் மொத்தம் 42 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. 2014 தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் 34 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், கம்யூனிஸ்ட் 2 தொகுதிகளிலும், பா.ஜனதா 2 தொகுதிகளிலும் வென்றது. மாநிலத்தில் சமீபகாலமாக நடைபெற்ற பஞ்சாயத்து, நகராட்சி தேர்தல்களில் பா.ஜனதா தலைக்காட்ட தொடங்கியது. திரிணாமுல் காங்கிரசுக்கு அடுத்த இடத்தையும் தனதாக்கியது. 

கடந்த தேர்தல்களில் 2 தொகுதிகளில் வென்ற பா.ஜனதா இம்முறை மாநிலத்தில் 22 தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்டங்களிலும் மேற்கு வங்காளத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தல் தொடங்கியதில் இருந்து பா.ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே வன்முறை நேரிட்ட வண்ணம் உள்ளது. இதன் உச்சமாக கொல்கத்தாவில் செவ்வாய் அன்று அமித்ஷாவின் பேரணியில் வன்முறை வெடித்தது. 

மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறார். மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரிகள், பா.ஜனதா என நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. பிற மாநிலங்களவைவிடவும் தேர்தலில் அதிக கவனம் பெற்றுள்ளது. 2018 இறுதியில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பா.ஜனதாவை எதிர்கொள்வோம் என கூறப்பட்டது. ஆனால் உ.பி.யில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் காங்கிரஸை சேர்க்க மறுத்துவிட்டது. 

அந்தவரிசையில் திரிணாமுல் காங்கிரசும் நடவடிக்கையை மேற்கொண்டது. பா.ஜனதாவை ஆட்சியைவிட்டு அகற்றவேண்டும் என விரும்பும் மம்தா பானர்ஜி பிராந்திய கட்சிகளின் கூட்டணியில் ஆட்சியென கூறிவந்தார். ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க அவருக்கு விருப்பம் கிடையாது. இப்போது அந்நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வந்துள்ளார். அதாவது மோடியை ஆட்சியிலிருந்து அகற்ற எதற்கும் தயார் என்ற நிலைக்கு திரும்பியுள்ளார்.

 “பா.ஜனதாவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு ராகுல் காந்தியை பிரதமர் ஆக்கினாலும் ஆதரவை அளிக்க தயார் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளது,” எனக் அக்கட்சியின் வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தி வையர் செய்தி இணையதளத்திற்கு பேட்டியளித்து பேசுகையில் மம்தா பானர்ஜியும், மோடியை ஆட்சியைவிட்டு அகற்றுவதற்கு எதற்கும் தயாரென கூறியுள்ளார். அதற்காக காங்கிரசுடன் கூட்டணி அமைக்கவும் தயாரெனக் கூறியுள்ளார்.

பா.ஜனதாவில் மோடியை தவிர்த்து வேறு யாராவது பிரதமர் ஆக்கப்பட்டால் உதவி செய்வீர்களா? என்ற கேள்விக்கு கிடையாது என பதில் கூறிவிட்டார். காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் தயார் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளது தெளிவாகியுள்ளது.

Next Story