கருத்துக்கணிப்புகளால் உற்சாகம்..! 3 ஆயிரம் கிலோ லட்டுக்கள் ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்


கருத்துக்கணிப்புகளால் உற்சாகம்..! 3 ஆயிரம் கிலோ லட்டுக்கள் ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்
x
தினத்தந்தி 22 May 2019 8:16 AM IST (Updated: 22 May 2019 8:16 AM IST)
t-max-icont-min-icon

கருத்துக்கணிப்புகள் சாதகமாக வெளிவந்துள்ளதால், வெற்றியை கொண்டாட 3 ஆயிரம் கிலோ லட்டுக்கள் பாஜக வேட்பாளர் ஆர்டர் கொடுத்துள்ளார்.

மும்பை,
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2014–ம் ஆண்டு மே மாதம் 26–ந்தேதி பதவி ஏற்றது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்துமுடிந்து, நாளை (வியாழக்கிழமை) ஓட்டுகள் எண்ணப்படுகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பெரும்பாலும் தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியான 14 கருத்து கணிப்புகளில் 12, இந்த கூட்டணிக்கு 282 இடங்கள் முதல் 365 இடங்கள் வரை என முழு பெரும்பான்மை கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

வெற்றி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் கொண்டாட்ட மனநிலைக்கு பாஜகவினர் சென்றுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் வடக்கு மும்பை தொகுதியில் பாஜக சார்பாக கோபால் ஷெட்டி போட்டியிடுகிறார். 

இவர் காங்கிரஸ் வேட்பாளரும், பிரபல நடிகையுமான ஊர்மிளா மடோன்ட்கரை எதிர்த்து களத்தில் நிற்கிறார். இந்த நிலையில் அவர் பாஜக வெற்றியை கொண்டாடுவதற்காக 3 ஆயிரம் கிலோ லட்டுவை ஆர்டர் செய்திருக்கிறார். இந்த லட்டுகள் நாளை  தேர்தல் முடிவு வெளியாகும் நாளன்று மக்களுக்கு வழங்க அவர் திட்டமிட்டுள்ளார். 
1 More update

Next Story