மூக்கடைப்பு பரிசோதனைக்கு வந்த சிறுவனுக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை - கேரளாவில் விபரீதம்


மூக்கடைப்பு பரிசோதனைக்கு வந்த சிறுவனுக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை - கேரளாவில் விபரீதம்
x
தினத்தந்தி 22 May 2019 7:58 PM GMT (Updated: 22 May 2019 7:58 PM GMT)

கேரளாவில் மூக்கடைப்பு பரிசோதனைக்கு வந்த சிறுவனுக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மஞ்சேரி,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கருவரக்குண்டு பகுதியை சேர்ந்த முகமது டேனிஷ் (வயது 7) என்ற சிறுவன் தன் பெற்றோருடன் மஞ்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்திருந்தான். மூக்கடைப்பு பிரச்சினைக்காக வந்த அவனுக்கு மூக்கில் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்திருந்தனர். அதே மருத்துவமனைக்கு தனுஷ் என்பவர் குடலிறக்கம் அறுவை சிகிச்சைக்காக வந்திருந்தார்.

பெயர் குழப்பத்தால் தனுசுக்கு பதில் டேனிசுக்கு மருத்துவமனை டாக்டர் சுரேஷ் குமார், குடலிறக்கம் அறுவை சிகிச்சையை செய்தார். தன் மகனின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவனுடைய பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்து உள்ளார். அப்போது தான் பெயர் குழப்பத்தால் இந்த விபரீதம் நடந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த கேரள சுகாதார துறை மந்திரி சைலஜா, டாக்டர் சுரேஷ் குமாரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இலவச மேல் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் பதில் அளிக்க மாநில மனித உரிமை கமிஷனும் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Next Story