உ.பி.யில் மோடி அலையில் சிக்கி சின்னாப்பின்னமான ‘மகா கூட்டணி’...!


உ.பி.யில் மோடி அலையில் சிக்கி சின்னாப்பின்னமான ‘மகா கூட்டணி’...!
x
தினத்தந்தி 24 May 2019 12:18 PM GMT (Updated: 24 May 2019 12:18 PM GMT)

உத்தரபிரதேச மாநிலத்தில் மோடி அலையில் சிக்கி மகா கூட்டணி சின்னாப்பின்னமாகியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மொத்தம் 80 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இங்கு வெற்றிப்பெறும் கட்சி மத்தியில் எளிதாக ஆட்சி அமைக்கலாம் என்ற நிலை இருக்கிறது. இதனை 2014 தேர்தலில் செய்தது. அங்கு 73 தொகுதிகளை பா.ஜனதா கூட்டணி கைப்பற்றியது. பா.ஜனதா மட்டும் 71 தொகுதிகளில் வென்றது. இம்முறை பா.ஜனதாவை தோற்கடிக்க மாநிலத்தில் ஆட்சி செய்த இரு பெரிய மாநில கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கூட்டணி அமைத்தது. இதனால் பா.ஜனதாவிற்கு பின்னடைவு இருக்கும் என பார்க்கப்பட்டது. 

இருப்பினும் பா.ஜனதா கட்சி மோடி அலையில் வெற்றியையே தனதாக்கியுள்ளது. பா.ஜனதா கட்சி முன்பு போல் 71 தொகுதிகளில் வெற்றிப்பெறவில்லை என்றாலும் 7 தொகுதிகளை மட்டும் இழந்து 64 தொகுதிகளை தன்வசப்படுத்தியது. கடந்த முறை 42 சதவீதம் வரையிலான வாக்குகளை பெற்றது பா.ஜனதா. இம்முறை சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணியையும் தாண்டி 49.6 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளது.

மத்தியில் ஆட்சி என்ற வியூகத்துடன் தொடங்கப்பட்ட மகா கூட்டணி மோடியின் அலையில் சிக்கி சின்னாப்பின்னமானது.

மகா கூட்டணியால் மாயாவதிக்கு ‘லக்’ அடித்துள்ளது. கடந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஒருதொகுதியில் கூட வெற்றிப்பெறவில்லை. ஆனால் இம்முறை 10 தொகுதிகளை வென்றுள்ளது. கடந்த முறை சமாஜ்வாடி 5 தொகுதிகளில் வென்றது. அதேபோன்று இம்முறையும் 5 தொகுதிகளில்தான் வென்றுள்ளது. கூட்டணியால் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10 தொகுதிகள் கிடைத்துள்ளது. இரு கட்சிகளின் வாக்கு வங்கியும் குறைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் சோனியா காந்தி வெற்றிப் பெற்றார். ராகுல் காந்தி தோல்வியை தழுவினார். 

Next Story