நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள்


நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள்
x
தினத்தந்தி 27 May 2019 6:13 AM GMT (Updated: 27 May 2019 6:13 AM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

வெற்றி பெற்ற 539 எம்.பி.க்களை ஆய்வு செய்ததில், 233 எம்.பி.க்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 26 சதவீதம் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக எம்.பி.க்கள் 116 பேர் மீதும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் 29 பேர் மீதும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 13 எம்.பி.க்கள் மீதும் குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. திமுகவின் 10 எம்.பி.க்கள், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 9 எம்.பி.க்கள் மீதும் குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்து எடுக்கப்பட்ட 542 எம்.பி.க்களில்  25 முதல் 40 வயதிற்குட்பட்டோர் 12 சதவீதமாகவும்,  41 முதல் 55 வயதிற்குட்பட்டோர் 41 சதவீதமாகவும், 56 முதல் 70 வயதிற்குட்பட்டோர் 42 சதவீதமாகவும், 70 வயதிற்கு மேற்பட்டோர் 6 சதவீதமாகவும் உள்ளனர்.

தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி.க்களின்  கல்வியறிவை பொருத்தவரை  உயர்கல்வி 27 சதவீதம் பேரும்,  பட்டப்படிப்பு 43 சதவீதம் பேரும்,  பட்ட மேற்படிப்பு 25 சதவீதம் பேரும், டாக்டரேட் 4 சதவீதம் பேரும் படித்து உள்ளனர்.

சமூக சேவையில் 39 சதவீதம் எம்.பி.க்களும்,  வணிகத்தில் 23 சதவீத எம்.பி.க்களும் , விவசாயத்தில் 38 சதவீத எம்.பி.க்களும்,  வக்கீலாக 4 சதவீத எம்.பி.க்களும், டாக்டராக 4 சதவீத எம்.பி.க்களும், கலைஞர்களாக 3 சதவீத எம்.பி.க்களும் , ஆசிரியர்களாக 2 சதவீத எம்.பி.க்களும் பணியாற்றி வருவதாக குறிப்பிட்டு உள்ளனர். 

Next Story