முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் அமைச்சராக பதவியேற்பு


முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் அமைச்சராக பதவியேற்பு
x
தினத்தந்தி 30 May 2019 2:15 PM GMT (Updated: 30 May 2019 2:15 PM GMT)

முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் மத்திய அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.



நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றியை தனதாக்கி மீண்டும் ஆட்சியை தொடர்கிறது. மோடி தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் நடந்து வருகிறது. பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகிய போது இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் அமைச்சரவையில் இடம்பெறுகிறார் என தகவல்  வெளியாகியது.

புதிய அமைச்சரவையில் இடம்பெறுமாறு பிரதமர் மோடி அவரிடம் கேட்டுக்கொண்டதாகவும், பேசியதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில் ஜெய்சங்கர் மத்திய அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றிய போது சிறப்பாக செயல்பட்டவர் ஜெய்சங்கர். பிரதமர் மோடியிடம் நன்மதிப்பை பெற்றவர்களில் ஜெய்சங்கரும் ஒருவராவார். அவருக்கு முன்னதாக சுஜாதா சிங், ஆகஸ்ட் 2013-ல் வெளியுறவுத்துறை செயலாளராக பதவி ஏற்ற போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங், அப்பதவியில் ஜெய்சங்கரை நியமிக்க விரும்பிய தாகக் கூறப்பட்டது. மோடி அரசு 2015-ல் சுஜாதா சிங்கிற்கு 7 மாதங்கள் பதவிக்காலம் இருந்த நிலையில் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார். இதனையடுத்து ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை செயலாளர் ஆனார். 

சீனாவுடனான பிரச்சனையை தீர்ப்பதில் மிகவும் முக்கியப் பங்காற்றியவர். மோடி பிரதமராகி அமெரிக்கா சென்ற போது இந்திய தூதரக அதிகாரியாக இருந்த ஜெய்சங்கர் அவருக்கு பெரிதும் உதவியாக இருந்தார். இந்திய தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடே விவகாரத்தில் திறமையாக செயல்பட்டு அமெரிக்கா உடனான பிரச்சனையை சமாளித்ததுடன் மோடியையும் ஜெய்சங்கர் கவர்ந்தார். இதனையடுத்தே வெளியுறவுத்துறை செய்லாளர் ஆனார். இப்போது அவருடைய பதவிகாலம் முடிந்த பின்னர் அமைச்சரவைக்கு பிரதமர் மோடி கொண்டுவந்துள்ளார். 

Next Story