குருவாயூர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்: எடைக்கு எடை தாமரை மலர்களை துலாபாரமாக வழங்கி வழிபாடு


குருவாயூர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்: எடைக்கு எடை தாமரை மலர்களை துலாபாரமாக வழங்கி வழிபாடு
x
தினத்தந்தி 8 Jun 2019 5:47 AM GMT (Updated: 8 Jun 2019 10:40 PM GMT)

பிரதமர் நரேந்திர மோடி குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். அங்கு துலாபாரம் நிகழ்ச்சியில் தனது எடைக்கு எடை தாமரை மலர்களை காணிக்கையாக வழங்கினார்.

குருவாயூர்,

நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகி இருக்கும் மோடி, கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், அங்கு துலாபாரம் வழங்கவும் முடிவு செய்திருந்தார். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர் கேரளா வந்தார்.

டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கொச்சியில் உள்ள கடற்படை தளத்துக்கு வந்த அவரை மாநில கவர்னர் சதாசிவம், மத்திய மந்திரி முரளதரன், மாநில மந்திரி சுரேந்திரன் மற்றும் பா.ஜனதாவினர் வரவேற்றனர். பின்னர் அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவை கழித்தார்.

பின்னர் நேற்று காலையில் கடற்படை ஹெலிகாப்டர் மூலம் குருவாயூருக்கு அவர் புறப்பட்டார். குருவாயூரில் உள்ள ஸ்ரீவத்சம் விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவர், பின்னர் அங்கிருந்து நடந்தே கோவிலுக்கு சென்றார். கேரளாவின் பாரம்பரிய உடையான ‘முண்டு’ (வேட்டி) மற்றும் வெள்ளை அங்கியை அணிந்து கோவிலுக்கு வந்தார்.

கோவிலின் பிரதான வாயிலில் நிர்வாகிகள் அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று கோவிலுக்குள் அழைத்து சென்றனர். அங்கு அவர் பகவான் கிருஷ்ணருக்கு நெய், பழங்கள், மலர்களை காணிக்கையாக வழங்கி வழிபட்டார். மேலும் பல்வேறு பூஜைகளுக்காக ரூ.40 ஆயிரம் நன்கொடையும் வழங்கினார். அவருக்கு கோவிலின் தலைமை குருக்களான வாசுதேவன் நம்பூதிரி பிரசாதம் வழங்கினார்.

பின்னர் பிரதமர் மோடி, பகவான் கிருஷ்ணருக்கு துலாபாரம் வழங்கினார். இதில் தனது எடைக்கு சமமாக தாமரை மலர்களை காணிக்கையாக அவர் வழங்கினார். இதற்காக கோவில் நிர்வாகத்தினர் 100 கிலோ தாமரை மலர்களை தமிழகத்தில் இருந்து வாங்கி வைத்திருந்தனர். கோவிலில் சுமார் 30 நிமிடங்களை செலவிட்ட பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு நடந்தே சென்றார். அவருடன் கவர்னர் சதாசிவம், மத்திய மந்திரி முரளதரன், மாநில தேவசம்போர்டு மந்திரி சுரேந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

குருவாயூர் கோவிலில் வழிபாடு நடத்தியது குறித்து பின்னர் தனது டுவிட்டர் தளத்தில் மோடி கூறுகையில், ‘குருவாயூர் கோவில் புனிதமானது மற்றும் அற்புதமானது. புகழ்பெற்ற இந்த கோவிலில், இந்தியாவின்வளம் மற்றும் வளர்ச்சிக்காக பிரார்த்தனை செய்தேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் தான் துலாபாரம் கொடுத்த நிகழ்ச்சியின் புகைப்படத்தை பகிர்ந்து, ‘ஆசிர்வதிக்கப்பட்ட தருணம்’ என்றும் கூறியிருந்தார்.

குருவாயூர் கோவிலில் வழிபாட்டை முடித்த பின் அருகில் உள்ள பள்ளியில் மாநில பா.ஜனதாவினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் முதல் முறையாக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது:-

சமீபத்திய ஜனநாயக திருவிழாவில் சிறப்பான பங்களிப்பு செய்த கேரள மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தல்களில் மக்களை கடவுளாகத்தான் நாடு பார்க்கிறது. மக்கள் எதிர்மறைத்தன்மையை நிராகரித்து நேர்மறைத்தன்மையை ஏற்றுக்கொண்டிருப்பதை சமீபத்திய தேர்தல் நிரூபித்து இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் இருந்து ஒரு எம்.பி.யையும் பெறாத நிலையில், நான் ஆட்சிக்கு வந்ததும் முதலில் கேரளாவுக்கு வந்தது ஏன்? என சிலர் வியப்படையலாம். ஆனால் வாரணாசியை போல கேரளாவும் எனக்கு நெருக்கமானது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவருக்கு அனைவருமே சமம்தான். ஜனநாயகத்தில் தேர்தல்களுக்கு இடமிருக்கிறது. அதில் வெற்றி பெறுபவர்கள் 130 கோடி மக்களுக்கும் பொறுப்பானவர்கள். எங்களை வெற்றி பெற வைத்தவர்களும், அல்லாதவர்களும் எங்கள் மக்களே. பா.ஜனதா கட்சி, வெறும் தேர்தல் அரசியலுக்காக உழைக்கும் கட்சி அல்ல. கேரளாவில் அச்சுறுத்தி வரும் நிபா வைரசை ஒழிக்க மத்திய அரசு கேரளாவுடன் தோளோடு தோள் நின்று அனைத்து உதவிகளும் செய்யும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


Next Story