டிக் டாக்கில் வீடியோ எடுக்க துப்பாக்கியுடன் போஸ், தவறுதலாக சுட்டதில் சிறுவன் உயிரிழப்பு


டிக் டாக்கில் வீடியோ எடுக்க துப்பாக்கியுடன் போஸ், தவறுதலாக சுட்டதில் சிறுவன் உயிரிழப்பு
x
தினத்தந்தி 13 Jun 2019 2:44 PM GMT (Updated: 13 Jun 2019 2:44 PM GMT)

டிக் டாக்கில் வீடியோ எடுக்க துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த சிறுவன் தவறுதலாக சுட்டதில் உயிரிழந்தான்.

முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போலவே ‘டிக்-டாக்’ என்ற பெயரில் புதிய செல்போன் செயலி அறிமுகமாகி உள்ளது. ஏற்கனவே இருக்கிற வீடியோவிற்கு ஏதுவாக வாயசைத்தோ அல்லது நடித்தோ வீடியோவாக மாற்றி நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுகிற ‘டிக்-டாக்’ செயலி கிட்டத்தட்ட ஸ்மார்ட் செல்போன் வைத்திருக்கும் அனைவரின் செயலிகளுடன் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.

இதற்கு இளைஞர்கள் மட்டுமின்றி குடும்ப பெண்களும் அடிமையாகி விட்டார்கள் என்றே கூறலாம். இதற்கு ஒருபுறம் பாராட்டுகள் குவிந்தாலும், மறுபுறம் ‘டிக்-டாக்’ செயலி கலாசார சீர்கேட்டிற்கு வழிவகுப்பதோடு கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. சமூக சீரழிவுக்கு ‘டிக்-டாக்’ வீடியோக்கள் வழி வகுப்பதாகவும், இந்த செயலியை பயன்படுத்தியவர்கள் சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த செயலிக்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது. ஆனால், இந்த தடையை சுப்ரீம் கோர்ட்டு விலக்கியது.

டிக் டாக்கில் அடிமையாகி, அதனால் விபத்து நேரிட்டும் உயிரிழப்பு தொடர்பான செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இப்போது மராட்டிய மாநிலம் சீரடியில் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். ஷீரடியில் உள்ள ஓட்டலில் பராதிக் வடேகர் (வயது 17) என்ற சிறுவன் தன்னுடைய உறவினர்களுடன் நாட்டு துப்பாக்கியை வைத்த வண்ணம் டிக்டாக்கில் வீடியோ எடுத்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக தவறுதலாக துப்பாக்கியை இயக்கியதால் குண்டு வெளியாகி சிறுவன் மீது பாய்ந்தது. இதில் சிறுவன் சம்பவ இடத்திலே உயிரிழந்தான். மற்றவர்கள் உடனடியாக ஓடிவிட்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story