மேற்கு வங்காள அரசுக்கு கடும் எதிர்ப்பு 100க்கும் அதிகமான மருத்துவர்கள் ராஜினாமா


மேற்கு வங்காள அரசுக்கு கடும் எதிர்ப்பு 100க்கும் அதிகமான மருத்துவர்கள் ராஜினாமா
x
தினத்தந்தி 14 Jun 2019 2:24 PM GMT (Updated: 14 Jun 2019 2:24 PM GMT)

மேற்கு வங்காள அரசுக்கு எதிராக கடும் போராட்டம் நடத்திவரும் மருத்துவர்கள் 100-க்கும் அதிகமானோர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

கொல்கத்தா மருத்துவ கல்லூரியில் திங்களன்று நோயாளி ஒருவர் உயிரிழந்ததும் உறவினர்கள் பயிற்சி மருத்துவரை கொடூரமாக தாக்கினர். இதனால் அவர் நிலை குலைந்தார், அவருடைய தலையில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து மேலும் ஒரு அரசு பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அங்கு பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். அவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால், மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே மம்தா பானர்ஜி இது பா.ஜனதா மற்றும் இடதுசாரிகளின் சதிதிட்டம் எனக் கூறினார். இதனையடுத்து கோபம் அடைந்துள்ள மருத்துவர்கள் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவர்களின் போராட்டம் தொடங்கியுள்ளது. இதனால் மருத்துவ சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திங்கள் அன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு இந்திய மருத்துவ கவுன்சிலும் அழைப்பு விடுத்துள்ளது. மிகவும் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மேற்கு வங்காளத்தில் மருத்துவர்கள் தங்களுடைய பணியை ராஜினாமா செய்தும் வருகிறார்கள். 

மேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர்கள் 100க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேற்குவங்கத்தில் மருத்துவ துறையின் முன்னேற்றத்துக்கும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிறந்த பணியாற்றி வந்தோம். ஆனால் இப்போதைய நிலையில் தொடர்ந்து எங்கள் பணியை செய்ய முடியாத சூழல் உள்ளது. எனவே பணியில் இருந்து விலகுகிறோம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Next Story