முத்தலாக் தடை மசோதாவை எதிர்ப்போம் பா.ஜனதா கூட்டணிக் கட்சி அறிவிப்பு


முத்தலாக் தடை மசோதாவை எதிர்ப்போம் பா.ஜனதா கூட்டணிக் கட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Jun 2019 3:40 PM GMT (Updated: 14 Jun 2019 3:40 PM GMT)

மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதாவை எதிர்ப்போம் என பா.ஜனதா கூட்டணிக் கட்சி அறிவித்துள்ளது.

பாட்னா,  

பா.ஜனதா கூட்டணியில் பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கிறது.  நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு மத்திய மந்திரிசபையில் போதிய பிரதிநிதித்துவம் கொடுக்காததால் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. இரு கட்சிகள் இடையே உரசல் போக்கு காணப்பட்டாலும், பா.ஜனதா கூட்டணியிலிருந்து வெளியேறவில்லை என ஐக்கிய ஜனதா தளம் கூறியுள்ளது. 

இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 17–ந் தேதி தொடங்க இருக்கிறது. இதில் முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்களவையில் பா.ஜனதா பெரும்பான்மையுடன் உள்ளது. மாநிலங்களவையில் நட்பு கட்சிகளின் ஆதரவு அவசியமானது. காங்கிரஸ் கட்சியோ மசோதாவில் இடம்பெற்றுள்ள சில அம்சங்களை எதிர்ப்போம் எனக் கூறியுள்ளது.

இந்நிலையில் மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதாவை எதிர்ப்போம் என பா.ஜனதா கூட்டணிக் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், பீகார் மந்திரியுமான ஷியாம் ரஜாக் செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ஜனதா கட்சியின் கூட்டணியில் நாங்கள் அங்கம் வகித்தாலும், சில பிரச்சினைக்குரிய விவகாரங்களில் எங்கள் கட்சியின் கொள்கைகளை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். மத்திய அரசு கொண்டு வரும் முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற மாநிலங்களவையில் நாங்கள் எதிர்ப்போம். இதனால் இரு கட்சிகளிடையே கூட்டணியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார். 

Next Story