மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நியமனம் - மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்


மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நியமனம் - மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 18 Jun 2019 1:03 PM GMT (Updated: 18 Jun 2019 8:40 PM GMT)

மக்களவை காங்கிரஸ் தலைவராக மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நியமிக்கப்பட்டார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. நாடாளுமன்ற மொத்த உறுப்பினர்களில் 10 சதவீதம் பேரைக் (55 எம்.பி.) கொண்ட கட்சிக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படும்.

காங்கிரஸ் கட்சிக்கு அத்தனை எம்.பி.க்கள் கிடைக்காததால், எதிர்க்கட்சி தலைவர் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த முறையும் காங்கிரஸ் கட்சி அந்த பதவியை பெற முடியவில்லை. கடந்த முறை, மக்களவை காங்கிரஸ் தலைவராக இருந்த மல்லிகார்ஜூன கார்கே, இந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை கட்சி தலைவர் பொறுப்பை ஏற்க மறுத்து விட்டார். அவர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதில் பிடிவாதமாக இருக்கிறார்.

சோனியா காந்தி, இரு அவைகளுக்கான நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே, மக்களவை காங்கிரஸ் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் பெர்காம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மக்களவை காங்கிரஸ் தலைவராக நேற்று நியமிக்கப்பட்டார். சோனியா காந்தி இல்லத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. சவுத்ரிக்கு வயது 63.

கடந்த 16-ந்தேதி நடைபெற்ற நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத்துடன் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் கலந்து கொண்டார். அப்போதே இதுகுறித்த யூகங்கள் எழுந்தன.

சவுத்ரி, 1999-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 5-வது தடவையாக பெர்காம்பூர் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1996-ம் ஆண்டில் இருந்து 1999-ம் ஆண்டுவரை, மேற்கு வங்காள மாநில எம்.எல்.ஏ.வாக இருந்தார். அம்மாநில காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார்.

மன்மோகன் சிங் மந்திரிசபையில், 2012-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டுவரை ரெயில்வே இணை மந்திரியாக பதவி வகித்துள்ளார்.


Next Story