அயோத்தி தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை


அயோத்தி தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 18 Jun 2019 11:15 PM GMT (Updated: 18 Jun 2019 10:52 PM GMT)

அயோத்தி தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பிரயாக்ராஜ்,

கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி வளாகத்துக்குள் ஒரு ஜீப் அத்துமீறி புகுந்தது. அதில் வந்த 5 பேரும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் ஆவர்.

அவர்கள் கையெறி குண்டுகளை வீசினர். துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அப்போது காவலுக்கு இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 35 பேர், அவர்களை எதிர்கொண்டனர். ஒரு மணி நேர சண்டைக்கு பிறகு 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அவர்கள் நேபாளம் வழியாக, ராமபக்தர்கள் போன்று வந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். 2 அப்பாவிகளும் இந்த தாக்குதலில் பலியானார்கள். 3 போலீசார் காயம் அடைந்தனர்.

பயங்கரவாதிகளுக்கு 5 பேர் உதவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த இர்பான் கான், காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த ஆஷிக் இக்பால், ஷகீல் அகமது, முகமது நசீம், முகமது அஜிஸ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பிரயாக்ராஜில் (அலகாபாத்தில்) உள்ள நைனி ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

பிரயாக்ராஜில் உள்ள தனிக்கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றது. நைனி ஜெயிலில் உள்ள 5 பேரிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடந்தது.

14 ஆண்டு காலமாக நீடித்த இந்த வழக்கில், தனி நீதிபதி தினேஷ் சந்த் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.

இர்பான், ஆஷிக் இக்பால், ஷகீல் அகமது, முகமது நசீம் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சதித்திட்டம் தீட்டுதல், பயங்கரவாதிகளுக்கு உதவுதல் உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டன. மற்றொருவரான முகமது அஜிஸ், விடுதலை செய்யப்பட்டார்.


Next Story