திருப்பதி கோவிலில் கடந்த மாதம் உண்டியல் வசூல் ரூ.100 கோடியை எட்டி சாதனை


திருப்பதி கோவிலில் கடந்த மாதம் உண்டியல் வசூல் ரூ.100 கோடியை எட்டி சாதனை
x
தினத்தந்தி 5 July 2019 6:07 PM GMT (Updated: 5 July 2019 6:07 PM GMT)

திருப்பதி கோவிலில் கடந்த மாதம் உண்டியல் வசூல் ரூ.100 கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது.

திருமலை,

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்த பக்தர்கள் வழங்கும் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது.

இதில் கடந்த மாத உண்டியல் காணிக்கை வசூல் ரூ.100.37 கோடியை எட்டியிருக்கிறது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சாதனையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மொத்த உண்டியல் வசூல் ரூ.91.81 கோடி ஆகும். இதைப்போல கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட இந்த ஜூனில் 2.56 லட்சம் பக்தர்களும் கூடுதலாக திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்து உள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டு ஜூனில் 64.05 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டு இருக்கிறது. அது இந்த ஆண்டில் 71.02 கோடியாக அதிகரித்து இருக்கிறது. லட்டு பிரசாதத்தை பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஜூனில் 95.58 லட்சம் லட்டுகள் வினியோகிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது 1.13 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் தேவசம் போர்டு நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story