உத்தரபிரதேசத்தில் மினி லாரி மீது ஆட்டோ மோதியதில் 8 பேர் சாவு


உத்தரபிரதேசத்தில் மினி லாரி மீது ஆட்டோ மோதியதில் 8 பேர் சாவு
x
தினத்தந்தி 6 July 2019 9:07 PM GMT (Updated: 6 July 2019 9:07 PM GMT)

உத்தரபிரதேசத்தில் மினி லாரி மீது ஆட்டோ மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர்.

அவுரியா,

உத்தரபிரதேசத்தின் அவுரியா மாவட்டத்துக்கு உட்பட்ட டேலா பகுதியை நோக்கி நேற்று காலையில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் சுமார் 10 பேர் இருந்தனர்.

இந்த ஆட்டோ திவியாபூர் பகுதியில் சென்றபோது முன்னால் சென்ற கார் ஒன்றை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிரே வந்த மினி லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போல நொறுங்கி உருக்குலைந்தது.

இதில் ஆட்டோவில் இருந்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இந்த கோர சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 2 பேர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 5 பேர் ஆசிரியர்கள் ஆவர். அவர்கள் காலையில் பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.


Next Story