வெள்ளிக்கிழமை தொழுகைக்காக காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன - பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு


வெள்ளிக்கிழமை தொழுகைக்காக காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன - பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 9 Aug 2019 11:38 PM GMT (Updated: 9 Aug 2019 11:38 PM GMT)

காஷ்மீரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக நேற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக ஊரடங்கு, தொலைதொடர்பு சேவை ரத்து, சமூக வலைத்தளங்கள் முடக்கம் என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

மேலும் மாநிலம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு உள்ளன. ராணுவம், துணை ராணுவம் மற்றும் மாநில போலீசார் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். முக்கியமான நகரங்களில் 100 மீ. இடைவெளியில் சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

இவ்வளவு விழிப்புடன் கண்காணித்த பிறகும், ஸ்ரீநகரின் ராம்பக், பார்சுல்லா, நூர்பாக், பெமினா உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசப்பட்டன. இதைத்தவிர வேறு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்ததாக தகவல் இல்லை.

காஷ்மீர் பகுதி, முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாநிலம் என்பதால் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக அங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு முடிவு செய்திருந்தது. மாநிலத்தில் ஆய்வு செய்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அப்பாவி மக்களுக்கு எந்த தொல்லையும் கொடுக்கக்கூடாது என பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தார்.

அதன்படி முஸ்லிம்களின் தொழுகைக்காக நேற்று மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதைத்தொடர்ந்து மக்கள் தங்கள் அருகில் உள்ள மசூதிகளில் தொழுகை மேற்கொண்டனர். எனினும் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜாமியா மசூதியில் எந்த அலுவல்களும் நடைபெறவில்லை.

மாநிலத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், சமூக விரோத செயல்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு படையினர் தீவிர உஷார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். எனினும் சோபூரில் இளைஞர்களின் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. அவர்களை ராணுவம் துரத்தியடித்தது. எனினும் பெரும்பாலும் அமைதியான சூழலே நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஜம்முவின் நர்வால், பதிண்டி, குஜ்ஜார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. எனினும் ஜம்மு பிராந்தியத்தில் நேற்று சந்தைகள் திறக்கப்பட்டு இருந்தன. இதனால் மக்கள் கூட்டமாக சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர்.

இதைப்போல சம்பா, கதுவா, உதம்பூர் மாவட்டங்களில் நேற்று பள்ளிக்கூடங்கள் திறந்திருந்தன. பிற மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் திறக்கவில்லை. அவை அனைத்தும் சுதந்திர தினத்துக்கு பின்னரே திறக்கப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஜம்மு பல்கலைக்கழகம் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கிறது.

சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் உள்பட தனியார் வாகனங்கள் மட்டுமே இயங்குகின்றன. இதைப்போல வங்கிகள், அரசு அலுவலகங்களில் நேற்று ஊழியர்கள் வருகை காணப்பட்டது. எனினும் அங்கு செல்போன் இணையதள சேவை தொடர்ந்து முடக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த பிராந்தியத்தில் அமைதி நிலவுகிறது.

மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து கவர்னர் சத்யபால் மாலிக் அவ்வப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் ஊழியர்களை நியமிக்குமாறு மாவட்ட துணை கமிஷனர்களை அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

குறிப்பாக மக்களுக்கு தேவையான ரேஷன், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்காக சிறப்பு ஊழியர்களை நியமிக்குமாறு வலியுறுத்தி உள்ளார். ஒவ்வொரு ஊழியரும் தினந்தோறும் 20 வீடுகளுக்காவது சென்று மக்களை சந்தித்து அவர்களது தேவைகள் குறித்து விசாரித்து நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.

இதைப்போல காஷ்மீர் மக்கள் வெளியூர்களில் இருக்கும் தங்கள் உறவுகளுடன் பேசுவதற்காக மாவட்ட தலைநகரங்களில் தொலைபேசி சேவையை ஏற்படுத்துமாறு துணை கமிஷனர்களை அறிவுறுத்தி உள்ள கவர்னர், நோயாளிகளுக்கு சிறப்பு ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்துமாறும் தனது உத்தரவில் கூறியுள்ளார்.


Next Story