டெல்லியில் சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - காஷ்மீர் நடவடிக்கைகளால் கூடுதல் உஷார் நிலை


டெல்லியில் சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - காஷ்மீர் நடவடிக்கைகளால் கூடுதல் உஷார் நிலை
x
தினத்தந்தி 12 Aug 2019 11:00 PM GMT (Updated: 12 Aug 2019 9:40 PM GMT)

சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. காஷ்மீர் நடவடிக்கைகளால் இந்த ஆண்டு பாதுகாப்பு படையினர் கூடுதல் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி,

இந்திய சுதந்திர தினம் வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியகொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். மேலும் ராணுவ அணிவகுப்பு, மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் என வண்ணமிகு நிகழ்வுகள் அரங்கேற உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள், முப்படை தளபதிகள் என ஏராளமான பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) ஒத்திகை நிகழ்ச்சியும் நடக்கிறது.

இந்த ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் சுதந்திர தினவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் ரத்து செய்யப்பட்டதால், அந்த கொந்தளிப்பு சுதந்திர தினவிழாவில் எதிரொலிக்காமல் இருக்க பாதுகாப்பு படைகள் கூடுதல் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

அதன்படி தலைநகர் டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ராணுவம், துணை ராணுவம் மற்றும் டெல்லி போலீசாருடன் இணைந்து, தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள், சிறப்பு ஆயுத படைப்பிரிவு (ஸ்வாட்) கமாண்டோக்கள் உள்ளிட்ட உயர்மட்ட பாதுகாப்பு படையினர் செங்கோட்டையை சுற்றி பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகின்றனர்.

சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாகன நிறுத்தும் இடங்கள் அனைத்தும் டெல்லி போலீசார் மற்றும் துணை ராணுவ படைகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கண்டறிய மோப்ப நாய் பிரிவு களத்தில் இறக்கப்பட்டு உள்ளன.

மர்ம நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில், விழா நடைபெறும் இடத்தை சுற்றி இருக்கும் ஓட்டல்கள் மற்றும் குடியிருப்புகளில் டெல்லி போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். செங்கோட்டை அமைந்திருக்கும் பகுதிகளில் மர்ம பட்டங்கள் பறப்பதை தடுக்கும் வகையில் விழிப்புடன் இருக்குமாறு போலீசார் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

இதைப்போல 15-ந்தேதி வரை தலைநகரில் ஆளில்லா விமானங்கள், சிறிய உளவு விமானங்கள், ராட்சத பலூன்கள், ரிமோட் விமானங்கள் போன்றவற்றை பறக்க விடுவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. செங்கோட்டைக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

இவ்வாறு தலைநகர் முழுவதையும் கையில் எடுத்துள்ள பாதுகாப்பு படையினர் அங்கு மர்ம நபர்களின் நடமாட்டம், ஆயுதங்கள், வெடிபொருட்களின் இருப்பு குறித்து சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.


Next Story