மகாராஷ்டிர வெள்ள நிவாரண நிதி; ஒரு மாத ஊதியம் வழங்க மாநில மந்திரிகள் முடிவு


மகாராஷ்டிர வெள்ள நிவாரண நிதி; ஒரு மாத ஊதியம் வழங்க மாநில மந்திரிகள் முடிவு
x
தினத்தந்தி 13 Aug 2019 12:09 PM GMT (Updated: 13 Aug 2019 12:09 PM GMT)

மகாராஷ்டிர வெள்ள நிவாரண நிதியாக ஒரு மாத ஊதியம் வழங்குவது என முதல் மந்திரி பட்னாவிஸ் மற்றும் மந்திரிகள் முடிவு செய்துள்ளனர்.

மும்பை,

மராட்டியத்தின் மேற்கு மாவட்டங்களான கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, புனே, சோலாப்பூரில் பலத்த மழை பெய்தது.  ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மேற்கண்ட 5 மாவட்டங்களும் வெள்ளக்காடாக மாறியது. இந்த மாவட்டங்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

தற்போது மழை ஓய்ந்துவிட்ட நிலையிலும் சாங்கிலி, கோலாப்பூர் மாவட்டங்கள் பல்வேறு இடங்களில் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 1,070 வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த 5 மாவட்டங்களிலும் மழைக்கு இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக சாங்கிலியில் மட்டும் 21 பேர் மழைக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போய் உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அங்கு கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிர முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், முதல் மந்திரி நிவாரண நிதிக்கு தங்களது ஒரு மாத ஊதியத்தினை வழங்குவது என முதல் மந்திரி பட்னாவிஸ் மற்றும் மந்திரிகள் முடிவு செய்துள்ளனர் என இன்று தெரிவித்து உள்ளது.

இதேபோன்று அவுரங்காபாத் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி அமைப்பு ரூ.25 லட்சமும், ஹர்மன் பினோகெம் அமைப்பு ரூ.51 லட்சமும் வழங்கி உள்ளது.  தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும், அமைப்புகளும் நிதியுதவி அளித்து வருகின்றன.

இந்த நிலையில், முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது.  இந்த கூட்டத்தில் மந்திரிகள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் நடந்த ஆலோசனையின் முடிவில், மாநிலத்தில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவியாக ரூ.6 ஆயிரத்து 813 கோடி ஒதுக்கப்படுகிறது என பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

இவற்றில் கோலாப்பூர், சாங்கிலி மற்றும் சட்டாரா ஆகிய மாவட்டங்களுக்கு ரூ.4,708 கோடியும், கொங்கன் பகுதி, நாசிக் மற்றும் பிற பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரூ.2,105 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

Next Story