கேரளாவில் மழைக்கு பலி 95 ஆக உயர்வு - இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் வழங்க உத்தரவு


கேரளாவில் மழைக்கு பலி 95 ஆக உயர்வு - இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் வழங்க உத்தரவு
x
தினத்தந்தி 14 Aug 2019 7:30 PM GMT (Updated: 14 Aug 2019 7:30 PM GMT)

கேரளாவில் மழைக்கு பலி எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் வழங்க முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது. மலப்புரம், வயநாடு, இடுக்கி, கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் சுமார் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதில் 60-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி உள்ளனர். இதில் 23 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. இன்னும் மண்ணுக்குள் புதைந்து இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி கேரளாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு படையினர், போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களை முதல்- மந்திரி பினராயி விஜயன் நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

இதற்கிடையே திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், கேரளாவில் மழை வெள்ளம், நிலச்சரிவு, கடல் சீற்றம் காரணமாக கடந்த சில நாட்களில் 95 பேர் பலியாகி உள்ளனர். பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும். வீடு மற்றும் நிலத்தை இழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக நிவாரண முகாம்களில் தங்கி உள்ள குடும்பங்களுக்கு அவசர உதவியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். அதேபோல் 15 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றார்.

இதற்கிடையே கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை அளவு குறைந்துள்ளது. இருந்தாலும் மலப்புரம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் ‘ரெட் அலர்ட்‘ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. பம்பை, மீனச்சல் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த நிலச்சரிவுக்கு அங்குள்ள கல்குவாரிகள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே கேரளா முழுவதும் செயல்பட்டு வந்த 750 கல் குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story