பக்ரா அணையில் இருந்து அதிகப்படியான நீர் திறப்பு: பஞ்சாப் மாநிலத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை


பக்ரா அணையில் இருந்து அதிகப்படியான நீர் திறப்பு: பஞ்சாப் மாநிலத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 17 Aug 2019 6:36 PM GMT (Updated: 17 Aug 2019 6:36 PM GMT)

பக்ரா அணையில் இருந்து அதிகப்படியான நீர் திறக்கப்பட்டுள்ளதால் பஞ்சாப் மாநிலத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்,

பஞ்சாப்பில் பெய்து வரும் கனமழை காரணமாக, இந்தியாவின் மிகப்பெரிய அணையான பக்ராவில் இருந்து அதிகப்படியான நீர் கால்வாய்கள் மூலமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பஞ்சாப்பின் பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பக்ரா அணையின் மொத்தமுள்ள 53 ஆயிரம் கன அடி நீரில்  இருந்து அதிகப்படியான 17 ஆயிரம் கன அடி  நீர் கசிவு கால்வாய்கள் மூலமாக வெளியேற்றப்பட்டது. மீதமுள்ள 36 ஆயிரம் கன அடி நீர் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பின்னர் வெளியிடப்பட்டது. நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை பக்ரா அணை 1,674.75 அடி நீர்மட்டத்தை பதிவு செய்தது, இது கடந்த ஆண்டின் விட 60 அடி அதிகம் ஆகும்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு பஞ்சாப் மாநிலத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பக்ரா அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டு வருவதால்,  ருப்நகர், லூதியானா, பெரோஸ்பூர் மற்றும் கீழ்நிலை பகுதிகள் உட்பட பல மாவட்டங்களில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சட்லெஜ் நதி மற்றும் தாழ்வான பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்கவும், தங்களை பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story