அயோத்தி வழக்கு : சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக இந்து அமைப்பினர் வாதம்


அயோத்தி வழக்கு : சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக இந்து அமைப்பினர் வாதம்
x
தினத்தந்தி 20 Aug 2019 7:18 AM GMT (Updated: 20 Aug 2019 7:18 AM GMT)

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் நடந்த தொல்பொருள் ஆராய்ச்சியில் அங்கு இந்து கோவில் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்திருப்பதாக இந்து அமைப்பினர் சார்பில் வாதிட்ட மூத்த வக்கில் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.

புதுடெல்லி,

அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தினந்தோறும் விசாரித்து வருகிறது. இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், நேற்று அவர் பணிக்கு வரவில்லை. எனவே நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வரவில்லை.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது, இந்து அமைப்பான ராம் லல்லா விராஜ்மன் தரப்பில் வாதிட்ட மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், “இந்திய தொல்பொருள் ஆய்வு சமர்ப்பித்த அறிக்கைகளின்படி  அந்த இடத்தில் முதலைகள் மற்றும் ஆமைகளின் சிலைகள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு அன்னியமானவையாகும். மசூதி  கட்டுவதற்காக அந்த இடத்தில் இருந்த இந்து கோவில் இடிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
 
இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Next Story