லட்டுக்காக ஒரு விவாகரத்து: மீரட்டில் ஒரு வினோதம்


லட்டுக்காக ஒரு விவாகரத்து: மீரட்டில் ஒரு வினோதம்
x
தினத்தந்தி 20 Aug 2019 9:53 AM GMT (Updated: 20 Aug 2019 9:53 AM GMT)

கடந்த சில மாதங்களாக லட்டு மட்டுமே உணவு, மனைவியிடம் விவாகரத்து கோரிய கணவர்.

மீரட்,

உத்தர பிரதேசம் மீரட் நகரை சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் அந்த கணவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அப்போது அவரின் மனைவி, ஒரு மந்திரவாதியிடம் சென்று கணவரின் உடல்நிலை சரியாக ஆலோசனை கேட்டுள்ளார்.

அதற்கு அந்த மந்திரவாதி, தினமும் கணவருக்கு காலையில் 4 லட்டுகளும், மாலையில் 4 லட்டுகளும் சாப்பிடக் கொடுக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் எந்த உணவும் தரக்கூடாது என அறிவுரை கூறியுள்ளார். மந்திரவாதியின் இந்த ஆலோசனைப்படி கடந்த சில மாதங்களாக கணவருக்கு வெறும் லட்டுகளை மட்டுமே சாப்பிட தந்துள்ளார் அந்த மனைவி. இதனால் வெறுத்துப்போன அந்த கணவர், விவாகரத்து வேண்டும் என கூறி நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த கணவர், " எனக்கு கடந்த சில மாதங்களாக லட்டுகளைத் தவிர வேறு எதையும் எனது மனைவி சாப்பிட கொடுப்பதில்லை. மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு காலையில் 4 லட்டுகள், மாலையில் 4 லட்டுகள் மட்டுமே தருகிறார். இடைப்பட்ட நேரத்தில் எதுவுமே சாப்பிடத் தருவதில்லை. இனியும் என் மனைவியுடன் என்னால் வாழமுடியாது, அதனால் விவகாரத்து கோரியுள்ளேன்" என பாவமாக கூறியுள்ளார்.

இருவருக்கும் கவுன்சிலிங் அளிக்கும் ஆலோசகர் இதுகுறித்து கூறுகையில், " கணவன், மனைவி இருவரிடமும் பேசினோம். அந்த பெண் சில மூடநம்பிக்கைகளை தீவிரமாக நம்புகிறார். லட்டு சாப்பிடுவதன் மூலம் தனது கணவரின் உடல்நிலை சரியாகும் என நம்பித்தான் தொடர்ந்து அவருக்கு லட்டை மட்டுமே கொடுத்துள்ளார். மற்றவற்றை ஏற்க மறுக்கிறார்" எனத் தெரிவித்தார்.

Next Story