தூதரக அளவிலான சந்திப்புக்கு பாகிஸ்தான் வழங்கிய அனுமதியை இந்தியா ஏற்றது


தூதரக அளவிலான சந்திப்புக்கு பாகிஸ்தான் வழங்கிய அனுமதியை இந்தியா ஏற்றது
x
தினத்தந்தி 2 Sep 2019 6:01 AM GMT (Updated: 2 Sep 2019 6:01 AM GMT)

குல்பூஷண் ஜாதவுடனான தூதரக அளவிலான சந்திப்புக்கு பாகிஸ்தான் வழங்கிய அனுமதியை இந்தியா ஏற்றது.

புதுடெல்லி,

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ்.  உளவு பார்த்ததாக கூறி, இவரை கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. இதனையடுத்து குல்பூஷண் ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து இந்தியா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் 17ந்தேதி உத்தரவிட்டது.

சர்வதேச ஒப்பந்தங்களின்படி, குல்பூஷண் ஜாதவுக்கு அளிக்கப்பட வேண்டிய சட்டரீதியிலான உரிமைகளையும், தூதரக உதவிகளையும் காலதாமதமின்றி உடனடியாக அளிக்க வேண்டும்  எனவும் பாகிஸ்தானுக்கு சர்வதேச கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. வியன்னா ஒப்பந்தங்களின்படி  இந்திய தூதரக அதிகாரிகள்  குல்பூஷண் ஜாதவை சந்திக்க அனுமதி அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது டுவிட்டரில் தெரிவித்தது.

குல்பூஷண் ஜாதவுடனான தூதரக அளவிலான சந்திப்புக்கு பாகிஸ்தான் வழங்கிய அனுமதியை அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனைக்கு பின் இந்தியா இன்று ஏற்று கொண்டுள்ளது.

இதனையடுத்து இந்திய தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியா, குல்பூஷண் ஜாதவை இன்று சந்திக்கிறார்.  இதற்கான சரியான சூழலை பாகிஸ்தான் ஏற்படுத்தி கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

சர்வதேச நீதிமன்ற உத்தரவுக்கேற்ப அமையும் இந்த சந்திப்பு, மிக வெளிப்படை தன்மையுடன், சிறந்த மற்றும் அர்த்தமுள்ள ஒன்றாக இருக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story