மேற்கு வங்காள சட்டமன்ற கூட்டத்தில் எம்எல்ஏக்கள் மோதல் ; மம்தா பானர்ஜி சமாதானப்படுத்தினார்


மேற்கு வங்காள சட்டமன்ற கூட்டத்தில் எம்எல்ஏக்கள் மோதல் ; மம்தா பானர்ஜி சமாதானப்படுத்தினார்
x
தினத்தந்தி 6 Sep 2019 12:09 PM GMT (Updated: 6 Sep 2019 12:09 PM GMT)

மேற்கு வங்காள சட்டமன்ற கூட்டத்தில் காங்கிரஸ்-திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மோதிக்கொண்டனர். அவர்களை முதல் மந்திரி மம்தா பானர்ஜி சமாதானப்படுத்தினார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று கேள்வி  நேரத்தின்போது போக்குவரத்துத்துறை மந்திரி சுவேந்து ஆதிகாரி கூறிய கருத்து தொடர்பாக ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் எதிர்க்கட்சியான  காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கு ஒருவர் கோபமாக பேசிக்கொண்டனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது.  முதல்- மந்திரி மம்தா பானர்ஜி தலையிட்டு இரு தரப்பினரையும்  சமாதானப்படுத்தினார்.

ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை வேலைக்கு எடுத்ததில் ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து ஆதிகாரி கோபமாக பேசினார்.

எதிர்வரும் நாட்களில், முர்ஷிதாபாத்தில் இருந்து மீதமுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் திரிணாமுல் காங்கிரசில் சேருவார்கள் என்றும், 2021 சட்டமன்றத் தேர்தலில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எவரும் வெற்றிபெற முடியாது என்றும் அவர் கூறினார்.

இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் எதிர் கூச்சலிட்டனர். இரு  தரப்பினரும் சபையின் மைய பகுதிக்கு வந்து கூச்சலிட்டனர்.

சபையின் மைய பகுதிக்கு வந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆளும் கட்சி  மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்களையும் சமாதானப்படுத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தினார். தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை கண்டித்த அவர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மீண்டும் தங்கள் இருக்கைகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

Next Story