பெட்ரோல், டீசல் கொண்டு செல்ல நேபாளத்துக்கு குழாய்வழி பாதை - மோடி திறந்துவைத்தார்


பெட்ரோல், டீசல் கொண்டு செல்ல நேபாளத்துக்கு குழாய்வழி பாதை - மோடி திறந்துவைத்தார்
x
தினத்தந்தி 10 Sep 2019 11:30 PM GMT (Updated: 10 Sep 2019 10:25 PM GMT)

நேபாளத்துக்கு பெட்ரோல், டீசல் கொண்டு செல்ல போடப்பட்டுள்ள குழாய்வழி பாதையை பிரதமர் மோடியும், நேபாள பிரதமரும் கூட்டாக திறந்து வைத்தனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் பீகார் மாநிலம் மோதிஹரிக்கும், நேபாளத்தின் அம்லேக்கஞ்சுக்கும் இடையே பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்வதற்கான குழாய்வழி பாதை போடப்பட்டுள்ளது. தெற்கு ஆசியாவில், எல்லை தாண்டி போடப்பட்ட முதலாவது குழாய்வழி பாதை இதுவே ஆகும். இதன் வழியே பெட்ரோல், டீசல் நேபாளத்துக்கு கொண்டு செல்லப்படும்.

இந்த பாதையை பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் ஷர்மா ஒளியும் நேற்று காணொலி காட்சி மூலம் கூட்டாக திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், நேபாள பிரதமர் ஷர்மா ஒளி பேசியதாவது:-

திட்டமிட்ட காலத்துக்கு முன்பே இந்த திட்டம் முடிக்கப்பட்டு விட்டது. இத்தகைய திட்டம், தெற்கு ஆசியாவில் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பாதையால், நேரம் மிச்சமாவதுடன், செலவு குறைகிறது. சாலை போக்கு வரத்து நெரிசல் குறைகிறது. சாலைமார்க்கமாக பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்வதால் ஏற்படும் காற்று மாசு குறைகிறது. மேலும், இதேபோன்ற குழாய்வழி பாதைகளை நேபாளம் முழுவதும் தொடங்க வாய்ப்பு உருவாகி உள்ளது.

இந்த திட்டம் காரணமாக, நேபாளத்தில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 2 ரூபாய் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நேபாளத்துக்கு கூடிய விரைவில் வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கிறேன். வளமான நேபாளத்தை உருவாக்க மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். இவ்வாறு ஷர்மா ஒளி பேசினார்.

நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:-

நேபாளத்துக்கு வர எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கூடிய விரைவில் அங்கு செல்வேன். இந்தியாவும், நேபாளமும் பல பத்தாண்டுகள் நட்புறவு கொண்டுள்ளன. சமீபகாலமாக, மேல்மட்ட அளவில் அரசியல் உறவு வளர்ந்துள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில், நேபாள பிரதமரை 4 தடவை சந்தித்துள்ளேன். கூட்டாக மேற்கொள்ளப்படும் திட்டங்களை விரைந்து முடிப்பதற்கு இரு நாடுகளும் முன்னுரிமை அளிக்கின்றன.

இந்த பாதை வழியாக, ஆண்டுதோறும் 20 லட்சம் மெட்ரிக் டன் சுத்தமான பெட்ரோலிய எரிபொருள் நேபாளத்துக்கு கொண்டு செல்லப்படும். இது, நேபாள மக்களுக்கு உதவும். இதன்மூலம், நேபாளத்தில் எரிபொருள் விலை குறையும். நேபாளம் வளர்ச்சி அடைவதற்கு உதவ இந்தியா உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.


Next Story