ரூ.12,652 கோடி செலவில் 50 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்


ரூ.12,652 கோடி செலவில் 50 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 Sep 2019 11:30 PM GMT (Updated: 11 Sep 2019 10:57 PM GMT)

ரூ.12 ஆயிரத்து 652 கோடி மதிப்பீட்டில் 50 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

மதுரா,

பிரதமர் மோடி நேற்று ஒரு நாள் பயணமாக உத்தரபிரதேச மாநிலம் மதுராவுக்கு சென்றார். அங்கு தேசிய கால்நடை நோய் கட்டுப்பாடு திட்டத்தை தொடங்கிவைத்தார்.

இது, ரூ.12 ஆயிரத்து 652 கோடி மதிப்பீட்டிலான திட்டம் ஆகும். முற்றிலும் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. கால்நடைகளுக்கு கால் மற்றும் வாயில் ஏற்படும் நோய்களை ஒழிப்பதே இதன் நோக்கம்.

இதன்படி, மாடுகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், பன்றிகள் போன்ற 50 கோடிக்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும். மேலும், 3 கோடியே 60 லட்சம் எருது கன்றுகளுக்கு ஆண்டுதோறும் தடுப்பூசி போடப்படும்.

‘புருசெல்லா’ என்ற பாக்டீரிய தொற்று, விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவுவதை தடுப்பதற்காக, இந்த தடுப்பூசி போடப்படுகிறது. 2025-ம் ஆண்டுக்குள் இந்த நோய்களை கட்டுப்படுத்துவதும், 2030-ம் ஆண்டுக்குள் அவற்றை ஒழிப்பதும் இதன் நோக்கம் ஆகும்.

தேசிய செயற்கை கருவூட்டல் திட்டத்தையும் மோடி தொடங்கிவைத்தார்.

அத்துடன், பெண் துப்புரவு தொழிலாளர்கள் 25 பேரை பிரதமர் மோடி சந்தித்தார். அந்த பெண்களுடன் அவர் தரையில் அமர்ந்து உரையாடினார். கை உறையும், முக கவசமும் அணிந்திருந்த அந்த பெண்கள், குப்பை சேகரிப்பது மற்றும் பிளாஸ்டிக்கை பிரித்தெடுப்பது பற்றிய பிரதமரின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

அவர்களிடையே பேசிய பிரதமர் மோடி, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை பொதுமக்கள் கைவிட வேண்டும் என்றும், சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி, கால்நடைகள், மீன்கள் ஆகியவற்றுக்கும் பிளாஸ்டிக் ஆபத்தை விளைவிப்பதாகவும் அவர் கூறினார்.

மதுரா நகரில், ஐ.ஐ.டி. மாணவர்களிடையே பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிளாஸ்டிக் பொருட்கள், பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. ஆகவே, பிளாஸ்டிக் பைகளுக்கு மலிவான, மாற்றுப்பொருள் கண்டுபிடிப்பதை ஒரு சவாலாக ஐ.ஐ.டி. மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். கால்நடைகளுக்கு பசுந்தீவனம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

புதிய சிந்தனைகள் மற்றும் புதிய யோசனைகளுடன் முன்வர வேண்டும். அவர்களின் யோசனைகளை அரசு பரிசீலித்து ஏற்றுக்கொள்ளும். இதனால் வேலைவாய்ப்பு உருவாகும். புதிய ‘ஸ்டார்ட் அப்’ தொழில்கள் உருவாகும்.

பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட வேண்டும். மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகள், சிமெண்டு தொழிற்சாலைகளிலும், சாலை போடுவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும். அரசு நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு வருகிறார். புதிய சட்டசபை கட்டிடத்தை திறந்து வைத்து, எம்.எல்.ஏ.க்களுடன் உரையாடுகிறார்.

பின்னர், ‘பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா’ என்ற விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தை தொடங்கிவைக்கிறார். 18 முதல் 40 வரை உள்ள சிறிய, நலிந்த விவசாயிகள் இத்திட்டத்தில் சேரலாம். அவர்கள் தொடர்ந்து பிரீமியம் தொகை செலுத்தி வந்தால், 60 வயதை கடந்த பிறகு அவர்களுக்கு ரூ.3 ஆயிரம் மாத ஓய்வூதியம் வழங்கப்படும். ஜார்கண்ட் மாநிலத்தில் இத்திட்டத்தில் சேர ஒரு லட்சத்து 16 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்துள்ளதாக முதல்-மந்திரி ரகுபர் தாஸ் தெரிவித்தார்.

மேலும், சிறிய கடைக்காரர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தையும் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் 18 முதல் 40 வயதுவரை உள்ளவர்கள் சேரலாம். அவர்கள் பிரீமியம் தொகை செலுத்தி வந்தால், 60 வயதை கடந்த பிறகு, ரூ.3 ஆயிரம் மாத ஓய்வூதியம் வழங்கப்படும்.

நாடு முழுவதும் ஏகலைவா மாதிரி பள்ளிகள் அமைப்பதற்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார். 462 ஏகலைவா பள்ளிகள் தொடங்கப்படுகிறது. ஜார்கண்ட் மாநிலத்துக்கான புதிய தலைமை செயலகம் கட்ட பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.


Next Story