பேஸ்புக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்


பேஸ்புக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்
x
தினத்தந்தி 12 Sep 2019 11:00 PM GMT (Updated: 12 Sep 2019 9:21 PM GMT)

பேஸ்புக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், ‘பேஸ்புக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை, மும்பை உள்ளிட்ட ஐகோர்ட்டுகளில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டு மட்டுமே விசாரிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தது.

இந்த மனுவை கடந்த மாதம் 20-ந்தேதி விசாரித்த நீதிபதிகள் தீபக்குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘சென்னை ஐகோர்ட்டில் தற்போது நடைபெற்று வரும் இது தொடர்பான வழக்கு விசாரணையை தொடரலாம். ஆனால் அந்த வழக்கில் முக்கியமான உத்தரவுகள் எதையும் சென்னை ஐகோர்ட்டு பிறப்பிக்கக் கூடாது’ என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த கோர்ட்டுகள் பதில் மனு தாக்கல் செய்யவும், மத்திய அரசு மற்றும் கூகுள், டுவிட்டர், யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்களும், செயலிகளின் நிர்வாகமும் இது தொடர்பாக தங்களது எதிர்வினையை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து நேற்று சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு தரப்பில் அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், அரசு வக்கீல் டி.ஆர்.பி.சிவகுமார் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.

அதில் ‘ஐகோர்ட்டில் மனுதாரர்கள் தரப்பில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. உள்நோக்கத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான கோரிக்கையை ஐகோர்ட்டு ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ள மனுக்களை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றுவதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை. மத்தியபிரதேசம், மும்பை ஐகோர்ட்டுகளில் தற்போது உள்ள இந்த வழக்குகள் ஆரம்ப நிலையில் உள்ளன.

தேவை என்றால் மற்ற ஐகோர்ட்டுகளில் தற்போது விசாரணை நிலுவையில் உள்ள சமூக வலைத்தளங்கள் தொடர்பான வழக்குகளை சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கலாம். தற்போதைய மனுவில் எந்த முகாந்திரமும் இல்லாததால் இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. இந்த பதில் மனுவுடன், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 20-ந்தேதி பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு தரப்பில் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Next Story