சந்திரயான்-2 பின்னடைவுக்கு மோடியின் வருகையே காரணம்: குமாரசாமி சர்ச்சை பேச்சு


சந்திரயான்-2 பின்னடைவுக்கு மோடியின் வருகையே காரணம்: குமாரசாமி சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 13 Sep 2019 5:32 AM GMT (Updated: 13 Sep 2019 5:32 AM GMT)

சந்திரயான்-2 பின்னடைவுக்கு மோடியின் வருகையே காரணம் என்று குமாரசாமி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

பெங்களூரு, 

நிலவின் தென் துருவப்பகுதியை ஆராய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விண்கலத்தின் லேண்டரான விக்ரம், கடந்த 7-ந்தேதி அதிகாலையில் நிலவின் தென் துருவப்பகுதியில் தரை இறங்கி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் விக்ரம் லேண்டர் தரை இறங்க வேண்டிய இடத்தை அடைவதற்கு 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது, சற்றும் எதிர்பாராத வகையில் அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அதையடுத்து விக்ரம் லேண்டரின் கதி என்ன ஆனது என்பது தெரியாமல் போனது. இது அனைவருக்கும் பெருத்த ஏமாற்றத்தை தந்தது.

இந்த நிலையில், விக்ரம் லேண்டர் தரை இறங்கி இருக்க வேண்டிய இடத்துக்கு 500 மீட்டர் அப்பால் விழுந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் தெர்மல் படம் எடுத்து அனுப்பியது. விக்ரம் லேண்டர் துண்டு துண்டாக உடைந்து விடவில்லை, ஒரே துண்டாகத்தான் கிடக்கிறது என்பது ஆர்பிட்டர் கேமரா எடுத்து அனுப்பிய படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

அதைத் தொடர்ந்து விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள  இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றனர்.

குமாரசாமி சர்ச்சை பேச்சு

இந்த நிலையில், கர்நாடக முன்னாள் முதல் மந்திரி ஹெச்.டி குமாரசாமி,  மோடி இஸ்ரோவிற்கு வந்ததால், விஞ்ஞானிகளுக்கு துரதிர்ஷ்டவசம் தொற்றிக்கொண்டது என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். குமாரசாமி கூறுகையில், “ சந்திரயான்-2 நிலவில் தரையிறங்குவதற்கு தானே காரணம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தவே மோடி பெங்களூரு வருகை தந்தார். சந்திரயான்-2 திட்டத்திற்காக விஞ்ஞானிகள் 10 முதல் 12 ஆண்டுகள் கடுமையாக உழைத்தனர். மோடி, விளம்பரம் தேடவே இஸ்ரோவிற்கு வந்தார். இஸ்ரோ மையத்திற்கு மோடி காலடி எடுத்து  வைத்த தருணம்தான் விஞ்ஞானிகளுக்கு துரதிர்ஷ்டமாக அமைந்து விட்டது என நான் நினைக்கிறேன்” என்றார்.

Next Story