சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான டி.கே.சிவக்குமாருக்கு திடீர் உடல் நலக்குறைவு - டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை


சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான டி.கே.சிவக்குமாருக்கு திடீர் உடல் நலக்குறைவு - டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை
x
தினத்தந்தி 14 Sep 2019 10:30 PM GMT (Updated: 14 Sep 2019 7:13 PM GMT)

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு நேற்று திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பெங்களூரு,

கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.சிவக்குமார் சட்டவிரோத பணபரிமாற்றம் செய்த வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வருகிற 17-ந் தேதி வரை அமலாக்கத்துறையினர் டி.கே.சிவக்குமாரிடம் விசாரணை நடத்த நேற்று முன்தினம் டெல்லி சிறப்பு கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு வரை டி.கே.சிவக்குமாரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர், துக்ளக் ரோடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று காலை 9.30 மணியளவில் போலீஸ் நிலையத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு டி.கே.சிவக்குமார் அழைத்து வரப்பட்டார். காலையில் டி.கே.சிவக்குமாருக்கு, அவரது சகோதரரான டி.கே.சுரே‌‌ஷ் எம்.பி. வீட்டில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டது. அந்த உணவை சாப்பிட்டுவிட்டு அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு டி.கே.சிவக்குமார் தயாரானார். அப்போது திடீரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிறிது நேரம் அவர் ஓய்வெடுத்தார்.

அப்போது டி.கே.சிவக்குமாரை, அவரது குடும்ப டாக்டர் ரங்கநாத் பரிசோதித்தார். அப்போது அவருக்கு அதிக ரத்த அழுத்தம் ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் அவர் சோர்வாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுபற்றி அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் சிறப்பு கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது டி.கே.சிவக்குமார் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் அவரிடம் விசாரணை நடத்துவதற்கு முன்பாக ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் வக்கீல்கள் கேட்டு இருந்தனர். இதற்கு நீதிபதியும் அனுமதி வழங்கி இருந்தார்.

இதனால் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட டி.கே.சிவக்குமார் உடனடியாக டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சைக்கு பின்பு டி.கே.சிவக்குமாரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

டி.கே.சிவக்குமார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், நேற்று அவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை. இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்த மாட்டார்கள் என்றும், நாளை(திங்கட்கிழமை) டி.கே.சிவக்குமாரிடம் விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story