சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்


சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்
x
தினத்தந்தி 16 Sep 2019 11:30 PM GMT (Updated: 16 Sep 2019 9:48 PM GMT)

சவுதி எண்ணெய் ஆலைகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.

புதுடெல்லி,

உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவுதி அரேபியா முன்னணியில் இருந்து வருகிறது. அங்கு புக்யாக் நகரில் அமைந்துள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் அருகில் குரெய்ஸ் நகரில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவை மீது கடந்த 14-ந் தேதி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர்.

அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான இந்த சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் வயலில் நடந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக குற்றம் சாட்டி உள்ள அமெரிக்கா, அந்த நாட்டுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டி உள்ளது.

இந்த எதிர்வினைகள் ஒருபுறம் இருக்க, விமான தாக்குதலால் சவுதி எண்ணெய் உற்பத்தி துறை நிலைகுலைந்து போயுள்ளது. தங்கள் எண்ணெய் உற்பத்தியை அந்த நாடு பாதியாக குறைத்து உள்ளது. அதன்படி நாளொன்றுக்கு சுமார் 57 லட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த உற்பத்தி பாதிப்பு சர்வதேச அளவில் எதிரொலிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை 10 சதவீதத்துக்கு மேல் உயர்ந்திருக்கிறது. இது இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இந்த விலை உயர்வால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 68 காசுகள் வீழ்ச்சியடைந்தது.

இந்தியா தனது 83 சதவீத எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை சார்ந்தே இருக்கிறது. இதில் ஈராக்குக்கு அடுத்ததாக சவுதி அரேபியாவில் இருந்துதான் அதிக கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது. தற்போது சவுதியில் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.

சவுதி அரேபியாவில் நாளொன்றுக்கு 50 லட்சம் பீப்பாய்க்கு அதிகமான எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால், இந்த இழப்பை மற்ற நாடுகளால் நீண்ட காலத்துக்கு ஈடு செய்ய முடியாது எனக்கூறியுள்ள எண்ணெய் நிறுவனங்கள், எனவே விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்று தெரிவித்து உள்ளன. சவுதி அரேபியாவின் உற்பத்தி, இயல்பு நிலைக்கு திரும்புவதை பொறுத்தே எண்ணெய் விலை உயர்வு கட்டுக்குள் வரும் எனவும் அவை கூறின.

இதற்கிடையே எண்ணெய் நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் இந்தியாவுக்கான எண்ணெய் ஏற்றுமதி பாதிக்காது என சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் உறுதியளித்து உள்ளது. இந்த தகவலை மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் வெளியிட்டு உள்ளார்.

சவுதியில் நடந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி துறையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து அராம்கோ மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கண்காணித்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


Next Story