சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு: டி.கே.சிவக்குமாருக்கு அக். 1ம் தேதி வரை காவல் நீட்டிப்பு - டெல்லி சிறப்பு நீதிமன்றம்


சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு: டி.கே.சிவக்குமாருக்கு அக். 1ம் தேதி வரை காவல் நீட்டிப்பு - டெல்லி சிறப்பு நீதிமன்றம்
x
தினத்தந்தி 17 Sept 2019 8:42 PM IST (Updated: 17 Sept 2019 8:42 PM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில், கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு அக். 1ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக செயல்பட்டவருமான டி.கே.சிவக்குமார் வீடுகளில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் அவரது டெல்லி வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.8.59 கோடி பணம் சிக்கியது.

இதுகுறித்து அமலாக்கத்துறையினர், டி.கே.சிவக்குமார் மீது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்ய கோரிய அவரது மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் ஆஜரானார்.

அவரிடம் 4 நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 4-வது நாள் விசாரணையின் முடிவில், அதாவது கடந்த 3-ந் தேதி டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். டெல்லி கோர்ட்டு முதலில் டி.கே.சிவக்குமாருக்கு 9 நாட்கள் போலீஸ் காவல் வழங்கியது. கடந்த 13-ந் தேதி டெல்லி கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு போலீஸ் காவலை மேலும் 4 நாட்கள் நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் காவல் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைந்தது. இதையடுத்து இன்று மாலை அவர் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.  

விசாரணையில் டி.கே.சிவக்குமாரின் நீதிமன்ற காவலை 14 நாட்கள் ( அக்.1-ம்) நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து டி.கே.சிவக்குமார் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக  டி.கே.சிவக்குமார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை கோரியதையடுத்து நீதிபதிகள் , டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என சான்று அளித்தால், அவரை முதலில் மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
1 More update

Next Story