“இந்தியை திணிக்குமாறு கூறவே இல்லை” - சர்ச்சை கருத்துக்கு அமித் ஷா விளக்கம்


“இந்தியை திணிக்குமாறு கூறவே இல்லை” - சர்ச்சை கருத்துக்கு அமித் ஷா விளக்கம்
x
தினத்தந்தி 18 Sep 2019 11:15 PM GMT (Updated: 18 Sep 2019 10:22 PM GMT)

இந்தி மொழி பற்றிய சர்ச்சை கருத்துக்கு அமித் ஷா விளக்கம் அளித்தார். இந்தியை திணிக்குமாறு நான் ஒருபோதும் கூறவே இல்லை என்று அவர் கூறினார்.

ராஞ்சி,

இந்தி தினத்தையொட்டி பாரதீய ஜனதா தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் “சர்வதேச அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த நாடு முழுவதற்கும் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்; இந்தி மொழிதான் இந்தியாவை ஒன்றுபடுத்தும்” என கூறி இருந்தார்.

இது இந்தி திணிப்பு என கருதப்பட்டு, பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அமித் ஷாவின் கருத்துக்கு எதிராக கண்டனங்களும் எழுந்தன.

இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில், இந்தி நாளிதழ் ஒன்று நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் இந்தி தொடர்பாக தெரிவித்த கருத்தால் எழுந்துள்ள சர்ச்சைக்கு பதில் அளித்தார். அவர், “நாட்டில் எங்கேயும் இந்தியை திணிக்குமாறு நான் ஒருபோதும் கூறவில்லை. இரண்டாவது மொழியாக இந்தியை கற்றுக்கொள்ளலாம் என்றுதான் சொன்னேன். கலாசார அடையாளங்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மாநில மொழிகளை பலப்படுத்துவதற்குத்தான் நான் மீண்டும் மீண்டும் குரல் கொடுத்து வந்திருக்கிறேன்” என கூறினார்.

அது மட்டுமின்றி, “நானே இந்தி பேசாத மாநிலத்தில் இருந்துதான் வந்திருக்கிறேன். நான் குஜராத்தில் இருந்து வந்திருக்கிறேன். அங்கு குஜராத்திதான் பேசப்படுகிறது. இந்தி அல்ல. எனது பேச்சை சரியாகக் கவனிக்க வேண்டும். இதை வைத்து அவர்கள் அரசியல் செய்ய விரும்பினால், அது அவர்கள் விருப்பம். ஆனால் குழப்பத்தில் இருந்து தெளிவு அடைய எனது பேச்சை மறுபடியும் கேட்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

“ தாய்மொழியில் கற்பித்தால்தான் ஒரு குழந்தை நன்றாக கற்க முடியும். இந்தியில் அல்ல. அது குஜராத்தி போன்ற மாநில மொழியாக இருக்கலாம்” என்றும் அமித் ஷா கூறினார்.

தங்கள் சொந்த மொழிகளை மறந்து விட்ட நாடுகளும் உண்டு என்று அமித் ஷா குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, “நாட்டில் உள்ள மாநில மொழிகளை வலுப்படுத்த நாம் பிரசாரம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. அப்படி செய்யாவிட்டால், ஆஸ்திரேலியா போன்றும், நியூசிலாந்து போன்றும் சொந்த மொழிகளையே மறந்து போகிற நிலை ஏற்பட்டு விடும்” என்றும் குறிப்பிட்டார்.

நாட்டின் உண்மையான குடிமக்களின் பெயர்களை கொண்ட என்.ஆர்.சி. என்று அழைக்கப்படுகிற தேசிய குடியுரிமை பதிவேடு அசாமில் மட்டுமல்லாது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமித் ஷா கூறினார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, சட்டசபை தேர்தல் நடக்க உள்ள ஜார்கண்ட் மாநிலம், ஜம்தாராவில் நேற்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில் கூறியதாவது:-

அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்ததின் மூலம் பாகிஸ்தானுக்கு அதன் இடத்தை மோடி காட்டி விட்டார்.

மேலும், காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதிதான் என்பதையும் அவர் காட்டி விட்டார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசின் முடிவை ராகுல் காந்தி ஆதரிக்கிறாரா என்பதை சொல்ல வேண்டும்.

(சட்டசபை தேர்தல் நடக்க உள்ள) மராட்டியம், ஜார்கண்ட், அரியானா மாநிலங்களுக்கு ராகுல் காந்தி செல்லும்போது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் முடிவை அவர் ஆதரிக்கிறாரா என்பதை சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story