வளர்ச்சிக்கான பயணம் தொடக்கம்; வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை தொடங்கி வைத்த அமித்ஷா பேச்சு
புதுடெல்லியில் இருந்து கத்ரா நோக்கி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை மத்திய மந்திரி அமித்ஷா இன்று தொடங்கி வைத்துள்ளார்.
புதுடெல்லி,
புதுடெல்லியில் இருந்து ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள கத்ரா நோக்கி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டு ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி அமித்ஷா, இந்தியாவில் தயாரான இந்த ரெயிலை இங்கிருந்து தொடங்கி வைப்பதில் பெருமை கொள்கிறேன். வேகம், அளவு மற்றும் சேவை ஆகிய கொள்கைகளை முன்வைத்து தனது இலக்குகளை அடைவதற்காக ரெயில்வே பணியாற்றி வருகிறது என கூறியுள்ளார்.
சுற்றுலாவை ஊக்குவிக்கும் முயற்சியாக தொடங்கப்பட்ட இந்த ரெயில் சேவையால் ஜம்மு மற்றும் காஷ்மீரின் வளர்ச்சிக்கான பயணம் தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்துக்கான அரசியல் பிரிவு 370 ஆனது நீக்கம் செய்யப்படுவதற்கு முன், வளர்ச்சிக்கான வழிகள் தடைப்பட்டு இருந்தன. அடுத்த 10 ஆண்டுகளில், வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாக ஜம்மு மற்றும் காஷ்மீர் உருமாறும் என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் டாக்டர் ஜிதேந்திரா சிங் மற்றும் டாக்டர் ஹர்ஷ வர்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story