சுவிஸ் வங்கிகளில் கருப்புப்பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல் முதல்முறையாக இந்தியா பெற்றது


சுவிஸ் வங்கிகளில் கருப்புப்பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல் முதல்முறையாக இந்தியா பெற்றது
x
தினத்தந்தி 8 Oct 2019 11:15 PM GMT (Updated: 8 Oct 2019 8:26 PM GMT)

சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் வைத்துள்ள இந்தியர்கள் தொடர்பான முதல்கட்ட தகவல்களை இந்தியா பெற்றுள்ளது.

புதுடெல்லி,

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு வரி தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள் இருந்ததால், இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டினரும் தங்களது கருப்பு பணத்தை போட்டு வைக்க சுவிஸ் வங்கிகளையே தேர்வு செய்தனர். ஆனால், கருப்பு பணத்துக்கு எதிரான உலக நாடுகளின் நடவடிக்கைகளால், இந்த பாதுகாப்பு அம்சத்தை சுவிட்சர்லாந்து கைவிட வேண்டியதாகி விட்டது.

ஒவ்வொரு நாட்டினரின் வங்கிக்கணக்கு தொடர்பான விவரங்களை அந்தந்த நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்காக, தானாக தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தை செய்து கொள்ளும் நிலைக்கு சுவிட்சர்லாந்து தள்ளப்பட்டது.

இந்தியா உள்பட 75 நாடுகளுடன் இத்தகைய ஒப்பந்தத்தை அந்நாடு செய்து கொண்டுள்ளது. ஒப்பந்தப்படி, வங்கிக்கணக்கு தகவல்களை பகிர்ந்து வருகிறது. 7 ஆயிரத்து 500 வங்கிகள், அறக்கட்டளைகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து இந்த தகவல்களை சுவிட்சர்லாந்து திரட்டி உள்ளது.

இந்நிலையில், இந்தியர்களின் வங்கிக்கணக்கு தொடர்பான முதல்கட்ட தகவல் தொகுப்பை இந்தியாவுக்கு சுவிட்சர்லாந்து அளித்துள்ளது. இது, தற்போதைய கணக்கு விவரங்கள், கடந்த ஆண்டு முடித்துக்கொள்ளப்பட்ட வங்கிக்கணக்கு விவரங்கள் ஆகியவை அடங்கியதாகும்.

மேலும், சிலரது பெயர்களை குறிப்பிட்டு, அவர்களது வங்கிக்கணக்கு பற்றிய விவரங்களை இந்தியா கேட்டிருந்தது. அத்தகைய 100 கணக்குகளின் விவரங்களையும் சுவிஸ் வருமான வரித்துறை அளித்துள்ளது.

இந்த வங்கிக்கணக்கு விவரங்களில் பெரும்பாலானவை தொழிலதிபர்கள் சம்பந்தப்பட்டவை ஆகும். தென்கிழக்கு ஆசிய நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, சில ஆப்பிரிக்க, தென்அமெரிக்க நாடுகளில் குடியேறிய வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் ஆகியோரின் பெயர்களும் இதில் உள்ளன.

இவர்கள் மோட்டார் வாகன உதிரிபாகங்கள், ரசாயனங்கள், ஜவுளி, ரியல் எஸ்டேட், வைரம், நகை மற்றும் எக்கு பொருட்கள் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆவர்.

இதில், கணக்கு வைத்திருப்பவரின் பெயர், முகவரி, வசிக்கும் நாடு, வரி அடையாள எண், வங்கியை பற்றிய விவரங்கள், கணக்கில் மீதி உள்ள தொகை, மூலதன வருவாய் ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியர்களின் வங்கிக்கணக்கு தொடர்பான அடுத்தகட்ட தகவல் பரிமாற்றம், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடக்கும் என்று சுவிஸ் வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பட்டியலில் உள்ளவர்கள் எத்தனை பேர், எவ்வளவு தொகை என்பது பற்றிய விவரங்களை அளிக்க அவர் மறுத்து விட்டார். ஒப்பந்தத்தில், ரகசியத்தை காப்பாற்றும் அம்சங்கள் இருப்பதால், அவற்றை பகிர்ந்து கொள்ள முடியாது என்று அவர் கூறிவிட்டார்.

இருப்பினும், இப்போது அளிக்கப்பட்ட தகவல்கள் மூலம், கருப்பு பணத்தை குவித்துள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று பெயர் கூற விரும்பாத அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

வெளிநாடுகளில் கருப்பு பணம் குவித்துள்ள இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இது முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.


Next Story