பீகாரில் நவீன உடைகளை அணிய மறுத்த மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவர்


பீகாரில் நவீன உடைகளை அணிய மறுத்த மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவர்
x
தினத்தந்தி 13 Oct 2019 1:23 AM GMT (Updated: 13 Oct 2019 1:23 AM GMT)

பீகாரில் நவீன உடைகளை அணிய மறுத்த மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவர் மீது பெண் புகார் கொடுத்துள்ளார்.

பாட்னா,

பீகாரில் வசித்து வரும் பெண் நூரி பாத்திமா.  கடந்த 2015ம் ஆண்டு இம்ரான் முஸ்தபா என்பவருடன் நூரிக்கு திருமணம் நடந்தது.  சில நாட்கள் கழித்து இந்த தம்பதி டெல்லிக்கு இடம் பெயர்ந்தது.

இதன்பின் சில மாதங்கள் கழித்து, டெல்லியில் உள்ள நவீன பெண்கள் அணிவது போன்று உடை அணியும்படி மனைவியிடம் இம்ரான் கூறியுள்ளார்.  சிறிய அளவிலான ஆடைகளை அணியும்படியும், இரவு விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் மற்றும் மதுபானம் குடிக்கவும் மனைவியை வற்புறுத்தி உள்ளார்.

இதற்கு மறுத்த நூரியை ஒவ்வொரு நாளும் இம்ரான் அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார்.  பல வருடங்களாக இந்த கொடுமை தொடர்ந்துள்ளது.  இதனிடையே 2 முறை கட்டாயப்படுத்தி மனைவிக்கு கருக்கலைப்பும் செய்துள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறும்படி மனைவியை இம்ரான் கூறியுள்ளார்.

இதற்கும் நூரி மறுத்துள்ளார்.  இதனால் அவருக்கு இம்ரான் முத்தலாக் கொடுத்து உள்ளார்.  இதுபற்றி போலீசாரிடம் நூரி புகார் அளித்து உள்ளார்.  பீகார் மகளிர் ஆணையத்திடமும் புகாரளித்து உள்ளார்.  இதனை அடுத்து அவர்கள் இம்ரானுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

Next Story