‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு


‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு
x
தினத்தந்தி 16 Oct 2019 11:54 PM GMT (Updated: 16 Oct 2019 11:54 PM GMT)

ஒரு குடும்பத்தை போற்றுவதையே காங்கிரஸ் கட்சி தேசபக்தியாக பார்ப்பதாக பிரதமர் மோடி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஜல்னா, 

மராட்டிய சட்டசபை தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்கு பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். நேற்று அவர் ஜல்னா மற்றும் அகோலா மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதில் அவர் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக விமர்சித்தார். ஜல்னாவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசும்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

மராட்டிய மாநிலம், தேசத்துக்கு வழிகாட்டியவர்கள் மற்றும் துணிச்சல் மிகுந்தவர்களை கொண்ட பூமியாகும். தேசியவாதம் மற்றும் தேசப்பற்று உணர்வுகள் மராட்டியத்தில் அதிக அளவில் உள்ளன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இந்த உணர்வுகளை மறந்து விட்டனர்.

காங்கிரஸ் கட்சி தனது தொண்டர்களுக்கு தேசியவாதம் குறித்து வகுப்பெடுப்பதாக நான் அறிந்தேன். இதைக் கேட்டு எனக்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை. சுதந்திர போராட்ட காலத்தில் இருந்த காங்கிரஸ் தற்போது இல்லை என்பதையே இது காட்டுகிறது.

காங்கிரஸ் கட்சி தனது கடைசி காலத்தில் இருக்கிறது. காங்கிரசின் தேசியவாதம், பரம்பரைவாதத்தில் புதைந்து விட்டது. ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக அது பார்க்கிறது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, தேசத்தின் நலன் சார்ந்தது எனக்கூறி காங்கிரசை சேர்ந்த இளம் தலைவர்களே அரசுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதனால் அவர்கள் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு உள்ளனர். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசில் உள்ள சில ஆணவமிக்க தலைவர்களால், முக்கிய தலைவர்கள் பலர் அந்த கட்சிகளில் இருந்து விலகிவிட்டனர்.

இதைப்போல இந்த கட்சிகளின் தொண்டர்கள் கூட காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தை வரவேற்று உள்ளனர். இவ்வாறு அனைத்து பிரிவினரும் 370-வது (காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து) நீக்கப்பட்டதை வரவேற்கின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகளால் அதை ஏற்க முடியவில்லை.

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலை கூட அவர்கள் கேள்வி எழுப்பினர். எந்த தேசியவாதியாவது இந்த தாக்குதலுக்கு எதிராக கேள்வி எழுப்புவாரா? அல்லது நமது ராணுவத்தையும், அதன் வீரர்களையும் அவமதிப்பாரா? தேச பாதுகாப்பு விவகாரத்தில் ஒட்டுமொத்த தேசமும் ஒரே குரலில் பேசவேண்டும். ஆனால் அனைத்து பிரச்சினைகளிலும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. இந்த வாக்கு வங்கி அரசியல், மராட்டியத்தை வெகுவாக பாதித்து உள்ளது.

அரசியல் லாபத்துக்காக சிலர், ‘அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதற்கும், மராட்டிய தேர்தலுக்கும் தொடர்பு இல்லை’ என கூறுகிறார்கள். இது காஷ்மீரால் மராட்டியத்தில் எதுவும் செய்ய முடியாது என்பதாகும். அவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், காஷ்மீர் மக்களும் இந்திய தாயின் மக்கள் என்பதே. அவர்கள் எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் மரணத்தோடு போரிட்டு வருகின்றனர்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Next Story