யாருக்காவது காஷ்மீர் செல்ல வேண்டுமா? நான் ஏற்பாடு செய்கிறேன் -பிரதமர் மோடி


யாருக்காவது காஷ்மீர் செல்ல வேண்டுமா? நான் ஏற்பாடு செய்கிறேன் -பிரதமர் மோடி
x
தினத்தந்தி 17 Oct 2019 8:15 AM GMT (Updated: 17 Oct 2019 8:15 AM GMT)

சட்டப்பிரிவு 370-ஐ நீக்கினால் காஷ்மீரை இழந்து விடுவோம், நாடே அழிந்துவிடும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள் நாடு அழிந்துவிட்டதா என்ன? என்று பிரதமர் மோடி காங்கிரசை சாடினார்.

பார்லி, 

மராட்டிய சட்டசபை தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்கு பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். நேற்று அவர் ஜல்னா மற்றும் அகோலா மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இன்று பார்லியில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி கூறியதாவது:- காஷ்மீரில் இந்துக்கள் இருந்திருந்தால் சட்டப்பிரிவு 370-ஐ நாங்கள் ரத்து செய்திருக்க மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகிறார். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் இந்து - முஸ்லீம் என நீங்கள் பார்க்கிறீர்களா?

இன்னொரு காங்கிரஸ் தலைவர் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால், நாடு அழிந்துவிடும் என்றார். 3 மாதங்கள் ஆகிவிட்டன. நாடு  அழிந்துவிட்டதா?  காஷ்மீரை நாம் இழந்துவிடுவோம் என்று சொன்னார்கள், நாம் என்ன காஷ்மீரை இழந்துவிட்டோமா? நீங்கள் காஷ்மீர் செல்ல வேண்டும் என்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள், நான் ஏற்பாடு செய்கிறேன். 

370-ரத்துக்கு யார் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பதை வரலாறு குறிப்பிடும்.  அக்.21 ஆம் தேதி மராட்டிய தேர்தலில், நாங்கள் அனைத்து தேர்தல் வெற்றிச்சாதனைகளையும் முறியடிப்போம்” என்றார். 

Next Story