கன்றுக்குட்டியை வேட்டையாட வந்த சிறுத்தையை பிடித்த விவசாயி


கன்றுக்குட்டியை வேட்டையாட வந்த சிறுத்தையை பிடித்த விவசாயி
x
தினத்தந்தி 20 Oct 2019 7:55 PM GMT (Updated: 20 Oct 2019 7:55 PM GMT)

கன்றுக்குட்டியை வேட்டையாட வந்த சிறுத்தையை விவசாயி ஒருவர் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஒடெராயனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தப்பா பணகார். விவசாயியான இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள அறையில் பட்டுக்கூடு வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் அதில் ஒரு கன்றுக்குட்டியை கட்டி வைத்துவிட்டு வீட்டில் படுத்து தூங்கினார்.

நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு சிறுத்தை பட்டுக்கூடு வளர்ப்பு கூடத்திற்குள் நுழைந்தது. இதனால் கன்றுக்குட்டியும், தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுமாடுகளும் கத்தியதால் சிவானந்தப்பா பணகார் அங்கு சென்று பார்த்தார். அப்போது சிறுத்தை கன்றுக்குட்டியை வேட்டையாட முயன்று கொண்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அந்த கூடத்தின் கதவை வெளிப்பக்கமாக பூட்டினார். இதைப்பார்த்த சிறுத்தை வேகமாக ஓடி வந்து கதவை முட்டியது. இருப்பினும் அதனால் முடியவில்லை. முடிவில் அது அந்த அறைக்குள் சிக்கிக் கொண்டது. இதையடுத்து அவர் தகவல் தெரிவித்தன்பேரில், வனத்துறையினரும், போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். பின்பு அவர்கள் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர். பின்பு சிறுத்தையை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

Next Story